கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தால் முடங்கியது இயல்பு வாழ்க்கை!
திருவனந்தபுரம்: தொழிற்சங்கங்கள் இன்று நடத்திய நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தால் கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போனது. வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
விலைவாசியைக் கட்டுப்படுத் துவது, பகுதிநேர ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் நிர்ணயிப்பது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, அரசு வங்கிகள் தனியார் மயமாக்கம் மற்றும் அரசுத் துறை பங்குகளை விற்பதைக் கைவிடுவது என்பது உட்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 10 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து நாடுதழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்தன.
இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல மாநிலங்களில் பேருந்துகள், ஆட்டோக்கள், கால் டாக்சிகள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கேரளாவில் முழு அளவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. கேரளா அரசுப் போக்குவரத்து பேருந்துகள் முழுமயாக இயக்கப்படவில்லை. ஒரு சில தனியார் வாகனங்கள் மட்டுமே இயங்கின. ரயில்களிலும் கூட பெரிய அளவில் கூட்ட நெரிசல் இல்லாமல் வெறிச்சோடியே காணப்பட்டது.
அதேபோல் ஐ.டி. நிறுவனங்களிலும் ஊழியர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. கொச்சி துறைமுகத்திலும் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலான கடைகள், தேநீர் கடைகள், ஹோட்டல்களும் மூடப்பட்டிருந்தன. தமிழகம் - கேரளா இடையேயான பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் ஒட்டுமொத்தமாக கேரளாவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது.