கேரளாவில் மத்திய அரசைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம்: போக்குவரத்து முடக்கம்
கேரளாவில் மத்திய அரசைக் கண்டித்து நடந்து வரும் முழு அடைப்புப் போராட்டத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் : கேரளாவில் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அனைத்து வர்த்தக சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதை அடுத்து, கேரளாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நிரந்தரத் தொழிலாளர்கள் சட்டத்தில் மத்திய அரசு புதிய திருத்தத்தை மேற்கொண்டது. அதன்படி, தனியார் துறைகளில் தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை செய்யமுடியாது என்றும், எப்போது வேண்டுமானாலும் நோட்டீஸ் கொடுத்து அவர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்ய முடியும் என்றும் அந்த சட்டதிருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இந்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கேரளாவில் இன்று அனைத்து தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
24 மணி நேரம் நடக்கும் இந்த அனைத்துக் கடையடைப்பு போராட்டத்தில் கேரளாவில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டுள்ளன. பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்ட பாரதிய மஸ்தூர் சங் இயக்கம் மட்டும் கலந்துகொள்ளவில்லை.
இதனையடுத்து கேரளாவில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மத்திய அரசு அலுவலகங்களின் முன்னால் போராட்டம் நடத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
கேரளாவில் இன்று நடக்க இருந்த பள்ளி, கல்லூரித் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்குள் செல்லும் தமிழகப் பேருந்து தமிழக எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.