புனேவில் செல்போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டுபவர்களை எச்சரிக்கும் எமன்!
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் எமதர்மராஜா வருவார் என்று புனே போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.
புனே: தமிழகத்தில் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் புனே போலீசார் புதுவித விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டினால் உயிர் போய்விடும் என்று நேரடியாக எமதர்மராஜாவே எச்சரிக்கின்றனர்.
செல்போனில் பேசிக்கொண்டு வண்டி ஓட்டுவதினால் அதிக விபத்துகள் ஏற்படுவதால் புனே காவல்துறையினர் ஒரு புது முயற்சியை தொடங்கியுள்ளனர். அது டிராபிக் சிக்னலில் தனது உதவியாளர் சித்ரகுப்தனுடன் எமதர்மராஜாவை நிறுத்தியுள்ளனர்.
அவரும் செல்போன் பேசும் வாகன ஓட்டிகளை உயிர் பயம் காட்டி எச்சரிக்கிறார். இது வாகன ஓட்டிகளிடையே ஒருவித அச்சம் கலந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஹெல்மெட்
இந்தியாவில் தலைக்கவசம் அணியாமலும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனம் ஓட்டுவதால் தான் அதிக விபத்துகள் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தான் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வேகம் அவசியமா?
அதிவேகமாக செல்பவர்களை எச்சரிக்கும் வகையில் 100ல் போகாதீர்கள்... 108ல் போகவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறது தமிழக போக்குவரத்து காவல்துறையின் விழிப்புணர்வு வாசகம்.
அழைப்பது எமன்
'வாகனம் ஓட்டும் போது செல்போன் மணி ஒலித்தால் எடுக்காதீர்கள் அழைப்பது எமனாகவும் இருக்கலாம்' என்று எச்சரிக்கை வாசகத்தை பலரும் படித்திருக்கலாம். ஆனால் புனே போக்குவரத்து காவல்துறையினர் இதை நேரடியாகவே செய்து காட்டியுள்ளனர்.
எமன் - சித்ரகுப்தன்
செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை தடுக்கும் வகையில் புனே காவல்துறை புதிய யுக்தியை மேற்கொண்டுள்ளது. உயிர் பறிக்கும் கடவுள் என இந்துக்களால் வர்ணிக்கப்படும் யமதர்மராஜாவின் வேடம் அணிந்த ஒருவரையும், அவருடன் பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்ரகுப்தன் வேடம் அணிந்த ஒருவரையும் சிக்னல்களில் ஆங்காங்கே நிற்க வைக்க உள்ளனர்.
என் கூட வர ஆசையா?
செல்போன் பேசிக்கொண்டு வருபவரை நிறுத்தும் எமதர்மராஜா அருகில் சென்று பூமியில் இருக்க வேண்டுமா, இல்லை என்னுடன் வருகிறாயா என்று கேட்பார். அதனால் பயம் உண்டாகி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் என்று போக்குவரத்து காவல்துறையினர் நம்புகின்றனர்.
நல்ல வரவேற்பு
இப்படி செய்வதன் மூலம் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக களத்தில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர் கூறுகின்றனர். எமதர்மராஜா, சித்ரகுப்தனாக போக்குவரத்து காவல்துறையினரே வேடம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.