'சென்னையில் ஒரு நாள்' பட பாணியில்.. காம்ப்ளியின் உயிரை காத்த டிராபிக் போலீஸ்!
மும்பை: கார் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா பாட்டில் மற்றும் கான்ஸ்டபிள் சேர்ந்து 12 நிமிடத்தில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி கடந்த வெள்ளிக்கிழமை சேம்பூருக்கு சென்றுவிட்டு மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு பஜேரோ காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுங்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வந்தபோது கார் ஓட்டி வந்த காம்ப்ளிக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டு வாகனத்தை நடுரோட்டில் நிறுத்தினார்.
நடுரோட்டில் கார் ஒன்று நின்று போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதை பார்த்த போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் குமார்தத்தா ஷெட்கே அந்த வாகனத்திற்கு அருகில் சென்று பார்த்தபோது காம்ப்ளி நெஞ்சுவலியால் துடித்துக் கொண்டிருந்தார். உடனே அவர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுஜாதா பாட்டிலுக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து காம்ப்ளியின் நிலைமையை பார்த்துவிட்டு போக்குவரத்து நெரிசலில் அவரை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது கடினம் என்பதை உணர்ந்தார்.
உடனே அவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சியோனில் இருந்து லீலாவதி மருத்துவமனைக்கு செல்லும் வழியை ஒழுங்குபடுத்திக் கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து சுஜாதாவும், குமார்தத்தாவும் சேர்ந்து காம்ப்ளியை 12 நிமிடத்தில் மருத்துவமனையில் சேர்த்து அவரது உயிரைக் காப்பாற்றினர்.
தற்போது காம்ப்ளியின் உடல் நிலை தேறி வருவதாக அவரது மனைவி ஆன்ட்ரியா தெரிவித்தார்.