செல்போன் டவர்களால் கதிர் வீச்சு அபாயம் இல்லை... டிராய் அறிவிப்பு
டெல்லி : செல்போன் டவர்களிலிருந்து கதிர் வீச்சு அபாயம் எதுவும் இல்லை என்று இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது.
செல்போன் சிக்னல்களை அனுப்புவதில் முக்கியப் பங்கு வகிப்பது செல்போன் டவர்கள். ஒரு செல்போனிலிருந்து மற்றொரு செல்போனைத் தொடர்பு கொண்டு அழைக்கும்போது, அதற்கான சிக்னல் தகவல்கள் செல்போன் டவர்கள் மூலமாகத்தான் பரிமாறப்படுகின்றன. டிராய் அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் எஸ்.கே. குப்தா இது தொடர்பாக பேசியதாவது...
செல்போன் டவர்களிலிருந்து கதிர் வீச்சு வெளிப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. மேலும், இந்தக் கதிர் வீச்சு உடல் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உண்மை நிலையைக் கண்டறிய டிராய் தொழில்நுட்ப குழு ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தது.
ஹிமாசல பிரதேச மாநிலத்தில் டவர்களை ஆய்வு செய்ய டிராய் முடிவு செய்தது. இது தொடர்பாக அந்த மாநிலத்தில் 300 செல்போன் டவர்கள் தீவிர ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது. செல்போன் டவர்களிலிருந்து எந்த விதமான கதிர் வீச்சும் இல்லை என்பது அந்த ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
செல்போன் டவர்களால் கதிர் வீச்சு ஏற்படுவதில்லை. அந்தக் டவர்களால் பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
நாட்டின் முக்கியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின் கூட்டத்தை டிராய் தற்போது நடத்தியுள்ளது. டவர்கள் தொடர்பான ஆய்வு முடிவுகள் அவர்களிடம் அளிக்கப்பட்டது. டவர்களின் எண்ணிக்கைக் குறைவினால்தான் அழைப்பின்போது துண்டிப்புகள் ஏற்படுகின்றன.
நிழல் பகுதிகள் என்று அறியப்படும் செல்போன் சிக்னல்களில் தொய்வு ஏற்படும் பகுதிகளில் கூடுதல் டவர்கள் அமைத்து, அழைப்புத் துண்டிப்பு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.