பெங்களூர் சிட்டியில் ரயில் தடம் புரண்டு விபத்து: பயணிகள் தப்பினர்.. சென்னை ரயில்கள் தாமதம்
பெங்களூர்: பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தின் 3வது பிளாட்பாரத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இருப்பினும் அதிருஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர். ஆனால் சிட்டி ரயில் நிலையம் வர வேண்டிய பல ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.
புவனேஷ்வரில் இருந்து விசாகபட்டிணம் வழியாக பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்திற்கு இன்று மதியம் 12.15 மணிக்கு, பிரசாந்தி எக்ஸ்பிரஸ் வந்ததடைந்தது. அந்த ரயில் 3வது பிளாட்பாரத்தில் வந்தபோது, இன்ஜின் மற்றும் அதையொட்டிய பெட்டி தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இதனால் சத்தத்தோடு, பெரும் அதிர்வு உணரப்பட்டது.
ரயில் குறைவான வேகத்தில் வந்ததால் அதிருஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த அதிகாரிகள், தண்டவாளத்தில் இருந்து ரயிலை மேலே தூக்கிவிடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சிட்டி ரயில் நிலையம் வர வேண்டிய பல ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்டு மதியம் சிட்டி ரயில் நிலையம் வர வேண்டிய டபுள் டக்கர் ரயில் கிருஷ்ணராஜபுரத்திலும், லால்பாக் எக்ஸ்பிரஸ் கோலார் மாவட்டத்திலும் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் அவசர வேலைக்காக பெங்களூர் வந்த பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.