ரயில் பயணத்தில் திடீர் மாற்றமா?... டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு பெயருக்கு மாற்றலாம்!
ரயில் பயணத்திற்கு திட்டமிட்டு திடீரென ரத்து செய்ய நேரிட்டால் டிக்கெட்டை என்ன செய்வது என்ற குழப்பம் வேண்டாம் வேறு ஒருவர் பெயருக்கு அதனை எளிதில் மாற்றலாம் என்று இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
டெல்லி: ரயில் பயணத்திற்கு திட்டமிட்டு திடீரென ரத்து செய்ய நேரிட்டால் டிக்கெட்டை என்ன செய்வது என்ற குழப்பம் வேண்டாம் வேறு ஒருவர் பெயருக்கு அதனை எளிதில் மாற்றலாம் என்று இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு திடீரென பயணம் ரத்து செய்ய நேரிட்டால் பலர் டிக்கெட்டை என்ன செய்வது என்று குழப்பமடைவார்கள். ஆனால் எளிய முறையில் வேறு ஒருவரின் பெயருக்கு டிக்கெட்டை மாற்றிவிட்டு எந்தவிதமான தொகை பிடித்தமும் இல்லாமல் மாற்றிக்கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.
டிக்கெட்டை மாற்றுவதற்கான வழிமுறைகளையும் ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. இதன்படி முக்கிய ரயில் நிலையங்களில் முன்பதிவு நிலையங்களில் இருக்கும் தலைமை கண்காணிப்பாளரே ரயில் டிக்கெட்டை யாருக்கு மாற்ற வேண்டும், பெயரை மாற்ற வேண்டும், இருக்கை, படுக்கையை மாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவர்.
அரசு ஊழியர்கள் எப்படி மாற்றம் செய்வது?
அரசு ஊழியராக இருந்தால், பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதத்தை எழுதி அதில் யார் பெயருக்கு டிக்கெட்டை மாற்ற வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தால் எந்த சிரமமுமின்றி எளிதில் டிக்கெட் மாற்றித்தரப்படும்.
24 மணி நேரத்திற்கு முன்பு
இதே போன்று தனது முன்பதிவு டிக்கெட்டை தனது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மகன்,மகள், மனைவி, கணவர் ஆகியோருக்கு மாற்ற விரும்பினால், பயணத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக, கடிதம் மூலம் முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தால், டிக்கெட்டை மாற்றிக் கொள்ளலாம்.
மாணவர்களின் டிக்கெட் மாற்றம்
மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்லும் போது, சில மாணவர்கள் திடீரென வரவில்லை அதற்கு பதிலாக வேறு மாணவர்களை அழைத்துச் செல்ல முடியும். பயணத்தின் 48 மணி நேரத்துக்கு முன்பாக, கல்வி நிறுவனத்தில் இருந்து வேண்டுகோள் கடிதம் பெற்று வந்து முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் கொடுத்து பெயர்மாற்றம் செய்து கொள்ளலாம்.
திருமணத்துக்காக முன்பதிவு செய்யும்போது
திருமணத்துக்காக மொத்தமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், பள்ளி , கல்லூரிகளில் என்சிசி, என்எஸ்எஸ், பிரிவு மாணவர்களும் பயணத்துக்கு 24 மணிநேரத்துக்கு முன்பாக கடிதம் எழுதிக்கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் இந்த டிக்கெட் மாற்றம் என்பது ஒரு முறை மட்டுமே செய்ய முடியும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.