ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு கோவில் கட்ட திருநங்கைகள் சங்கத்தினர் முடிவு
சந்திரபாபு நாயுடுவிற்குக் கோவில் கட்ட ஆந்திராவின் திருநங்கைகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
அமராவதி : ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவைப் பாராட்டி, கோவில் கட்ட திருநங்கைகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன், திருநங்கைகள் நல வாரியம் அமைக்க உத்தரவிட்டார். இதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு, பணி ஏற்பாடுகளை ஏற்படுத்தித் தர முடியும். இது திருநங்கைகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இதனால் சந்திரபாபு நாயுடுவிற்கு ஆந்திராவில் உள்ள திருநங்கைகள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தின் அமைப்பாளர் விஜயகுமார் கூறுகையில், ' இதுவரை திருநங்கைகளுக்கு எங்கேயும் மரியாதை இருந்தது இல்லை. சந்திரபாபு நாயுடுவால் தான் எங்களுக்கு ஒரு வாழ்வாதாரம் கிடைத்துள்ளது.
இது எங்கள் சமூகத்திற்கு கிடைத்த அங்கீகாரம். இதன் மூலம் எங்களுக்கு இந்த சமூகத்தில் உயர வாய்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் அமையவுள்ள இந்த கோவிலில் ஐந்து கிலோ எடையில் சந்திரபாபு நாயுடுவின் வெள்ளி சிலை அமைக்கப்பட உள்ளது. எனது சொத்துகளை விற்றாவது இந்தக் கோவிலைக் கட்டுவேன்' என்று அவர் உறுதி அளித்து இருக்கிறார்.
சந்திரபாபு நாயுடுவிற்கு கோவில் கட்டுவது இது முதல்முறை அல்ல. 2015ல், ஆந்திரமாநில தலைநகர் அமைக்கும் பணியில் சிறப்பாகச் செயல்பட்டார் என்று கூறி அமராவதி கிராம மக்கள் அவருக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.