தரிசனம் செய்ய வந்த திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு.. தொடர் சர்ச்சையாகும் சபரிமலை
பத்தினம்திட்டா: சபரிமலையில் தரிசனம் செய்ய வந்த திருநங்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு காலம் காலமாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து வயது பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு பாஜக, காங்கிரஸ், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. கோயிலுக்கு சென்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரவும், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி வந்து செல்லவும் கேரள போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.
அனுமதி
அதன்படி சபரிமலை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இந்த தடை உத்தரவை கொஞ்சம் கொஞ்சமாக நீட்டித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சர்ச்சையே இன்னு்ம அடங்காமல் இருக்க சபரிமலைக்கு வந்த திருநங்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் மூலம் இன்னொரு சர்ச்சை உருவானது.
தடுத்து நிறுத்திய போலீஸார்
கோட்டயம் மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த திருநங்கைகள் அனன்யா, திருப்தி, அவந்திகா, ரஞ்சுமோல் ஆகியோர் சபரிமலைக்கு இருமுடி அணிந்து கொண்டு சென்றனர். எருமேலி வழியாக பம்பைக்கு செல்ல முயன்ற போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
தடுத்த போலீஸ்
விசாரணையின் போது முறைப்படி விரதம் இருந்து வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எனினும் திருநங்கைகளை கோயிலுக்கு அனுப்பினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதிய போலீஸார் அவர்களை கோயிலுக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
திருப்பி அனுப்பிய போலீஸ்
இதனால் போலீஸாருடன் திருநங்கைகள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களை வாகனத்தில் ஏற்றிய டிரைவரையும் போலீஸார் திட்டினர். பெண் உடையில் இருப்பதால் அனுமதிக்க முடியாது என்றும் போலீஸார் தெரிவித்ததாக திருநங்கைகள் வேதனையுடன் கூறினர்.