எந்தப் பாலினம் என்பதை அரவாணிகளே தேர்ந்தெடுக்கும் உரிமை... மத்திய அரசு பரிசீலனை
டெல்லி: ஆணா பெண்ணா என தங்களது பாலினத்தை தாங்களே தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட அரவாணிகளுக்கான பல்வேறு நலன்கள் அடங்கிய சட்டத்தை இயற்றுவது தொடர்பாக மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
ஹார்மோன் காரணமாக ஒரு பாலினத்தில் இருந்து மற்றொரு பாலினத்திற்கு மாறுபவர்கள் அரவாணிகள் எனப் படுகின்றனர். இதற்காக அவர்கள் ஆபரேஷனும் செய்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், மூன்றாம் பாலினமான அரவாணிகளின் சமூக அங்கீகாரத்தை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயன்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக மத்திய சமூக நீதித்துறை நிபுணர் குழு ஒன்றை அமைத்து ஆராய்ந்தது. அந்த நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் தற்போது சட்டம் இயற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது மத்திய அரசு.
அதன்படி, அரவாணிகள் தங்களை ஆண், பெண் அல்லது மூன்றாம் பாலினம் என தங்கல் விருப்பப்படி அடையாளப் படுத்திக் கொள்ள முடியும்.
அதோடு, அரவாணிகளின் பாலின மாற்றத்திற்கான மருத்துவச் செலவையும் மத்திய அரசு ஏற்பது குறித்து ஆலோசிக்கப் பட்டு வருகிறது. இதற்காக நாட்டில் உள்ள சில மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்து அந்த ஆபரேஷன்களை இலவசமாக செய்யலாமா அல்லது இத்தகைய ஆபரேஷன்களுக்கு மானியம் வழங்கலாமா என்பது குறித்து அதில் ஆராயப் படுகிறது.
உடல் ரீதியான மாற்றத்திற்கான ஆபரேஷன்கள் மட்டுமின்றி ஹார்மோன் தெரபி, குரல் மாற்றுச் சிகிச்சை உள்ளிட்டவை வழங்கவும் அரசு ஏற்பாடு செய்யும் எனத் தெரிகிறது.
இவ்வாறு புதிய திட்டங்களை மத்திய அரசு அமல் படுத்துவதன் மூலம் பாலினம் மாற விரும்பும் ஏழை மக்கள் அதிக பயன் பெறுவர்.
திமுக எம்.பி. திருச்சி சிவா அரவாணிகள் நலன் தொடர்பாக ராஜ்யசபாவில் தனிநபர் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்தார். இது விரைவில் லோக்சபாவிலும் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப் பட உள்ளது.
இது தொடர்பாக மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட், ‘வரும் கூட்டத்தொடரின் போது லோக்சபாவில் அரவாணிகள் குறித்த மசோதா தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.