சமையல் காஸ் எப்போது காலியாகும் என்பதை முன்கூட்டியே அறியலாம்.. வருகிறது டிரான்ஸ்பரன்ட் சிலிண்டர்
டெல்லி: சிலிண்டருக்குள் சமையல் காஸ் எந்த அளவுக்கு உள்ளது என்பதை கண்டறியும் வகையிலான டிரான்ஸ்பரன்ட் சிலிண்டர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால், எடை குறைவு போன்ற புகார்களை தவிர்க்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.
காஸ் ஏஜென்சிகளில் இருந்து வீடுகளுக்கு சிலிண்டர்கள் கொண்டுவரப்படும் வழியில், அதில் குறிப்பிட்ட அளவுக்கு காஸ் திருடப்படுவதும், அவை கமர்சியல் தேவைகளுக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதும் பெரும்பாலானோர் அறிந்ததே.
இதனால், சிலிண்டர்கள் குறைந்த எடையில் இருப்பதாகவும், பயன்படுத்திய சிலிண்டரையே டெலிவரி செய்வதாகவும் நுகர்வோரிடம் இருந்து அதிகமாக புகார்கள் வர ஆரம்பித்துள்ளன.
இந்த பிரச்னையை நீக்க எரிவாயு அளவை தெளிவாக பார்க்கும் வகையில் கண்ணாடி போன்ற தன்மை கொண்ட டிரான்ஸ்பரன்ட் சமையல் காஸ் சிலிண்டர்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த வகை சிலிண்டர்கள் அறிமுகம் ஆகும். இதனால் கள்ளச்சந்தையில் காஸ்களை விற்பனை செய்ய முடியாததுடன், நுகர்வோர் நலனும் பாதுகாக்கப்படும்.
பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எண்ணெய் நிறுவனங்களுடன் ஏற்கெனவே இதுபற்றி ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த வகை சிலிண்டரில், காஸ் தீர்ந்து போகப் போவதையும் குடும்பத் தலைவிகள் முன்கூட்டியே எளிதில் அறியலாம். தற்போதுள்ள சாதாரண சிலிண்டருக்கு ரூ.1,400 டெபாசிட் தொகையாகும். டிரான்ஸ்பரன்ட் சிலிண்டருக்கு ரூ.2,500 முதல் ரூ.3,000 வரையில் டெபாசிட் தொகை வசூலிக்கப்படும். தேவைப்படுவோர் அதை பெறலாம்.