தொடர் மழை: திருப்பதி செல்லும் 2 மலைப்பாதைகளிலும் போக்குவரத்து நிறுத்தம்
திருப்பதி: தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பக்தர்களின் நலன் கருதி திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் இரண்டு மலைப்பாதைகளிலும் இன்று இரவு 10.30 மணி முதல் நாளை அதிகாலை 4.30 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் மற்றும் ஆந்திராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் திருமலையில் உள்ள 5 அணைகளும் நிரம்பியது. இதனால் அங்குள்ள கோகர்பம், பாபவிநாசம் அணையின் 2 மதகுகள் வழியாக நேற்று காலை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் அணையை ஒட்டியுள்ள மல்லமடுகு கிராம மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறு சித்தூர் மற்றும் கடப்பா வருவாய் அலுவலர்களை தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுகொண்டுள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு செல்லும் 2வது மலைப்பாதையின் 12வது கிலோ மீட்டர் முதல் 16வது கிலோ மீட்டர் வரை மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் திருமலைக்கு செல்லும் வாகனங்களை இணைப்பு சாலையில் 1வது மலைப்பாதை வழியாக அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2வது மலைப்பாதையில் சீரமைப்பு பணிகளை தேவஸ்தான ஊழியர்கள் மேற்கொண்டு வந்தனர். ஆனால் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அந்த பணிகள் பாதிக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனிடையே நேற்று காலை பக்தர்கள் நடந்து செல்லும் வாரி மெட்டு பாதையில் உள்ள நிழற்குடையின் மீது பெரிய பாறை ஒன்று உருண்டு விழுந்தது. அப்போது, பக்தர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பக்தர்களின் நலன் கருதி இரவு நேரங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க திருமலைக்கு செல்லும் 2 மலைப் பாதைகளிலும் இரவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இன்று இரவு 10.30 மணி முதல் நாளை அதிகாலை 4.30 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.