சபரிமலை கோயிலுக்கு பெயர் மாற்றம்... பழைய பெயரையே சூட்ட முடிவு
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பழைய பெயரையே வைக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் என்ற பழைய பெயரையே வைக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு கார்த்திகை மாதம், தை மாதம் என பல்வேறு தருணங்களில் நடை திறந்திருக்கும் வேளைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு சுவாமி தரிசனம் செய்வர்.
இந்த கோயிலுக்கு 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு காலம் காலமாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. பாலின பாகுபாடு தேவையில்லை என்றும் பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கோரி வருகிறது.
எனினும் இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. பெண்களை அனுமதிக்க முடியாது என்று தேவஸ்வம் போர்டு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பெண்கள் அனுமதி குறித்த வழக்கில் மேற்கொண்டு விவாதம் செய்ய சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெயர் மாற்ற திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு முடிவு செய்துள்ளது.
அதன்படி சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் என்ற பழைய பெயரையே வைக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு நேற்று முடிவு செய்துள்ளது. இந்த பெயர் மாற்றம் பக்தர்களுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.