சபரிமலை கோவிலுக்கு வரும் பெண்களுக்கு வயது சான்றிதழ் கட்டாயம்... தேவசம்போர்டின் புதிய உத்தரவு!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்கள் இனி தகுந்த வயது சான்றுக்கான அடையாளத்தை கொண்டு வர வேண்டும் என்று தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்கள் இனி தகுந்த வயது சான்றுக்கான அடையாளத்தை கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவை உடனடியாக அமலுக்கு வருவதால கோவிலை நிர்வகித்து வரும் தேவசம்போர்டு பிறப்பித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகின்றனர். ஜனவரி 14ம் தேதி இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்கள் அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளனர். சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பவர் என்பதால் இந்த கோவிலுக்குள் மாதவிடாய் பருவத்தில் உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
10 வயதிற்கும் கீழ் உள்ள சிறுமிகள் மற்றும் 50 வயதைக் கடந்த பெண்களே கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் திருவனந்தபுரம் தேவசம்போர்டு தலைவர்பத்மகுமார் இன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் சபரிமலை வரும் பெண்கள் இனி தகுந்த வயது சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆதார் அட்டையைக் கூட வயதிற்கான சான்றாக காட்டலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவசம்போர்டு புதிய உத்தரவு
மாதவிடாய் பருவத்தில் இருக்கும் சில பெண்களும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருவதாக சில சந்தேகங்கள் எழுந்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தகுந்த வயது சான்றிதழை காட்டினால் காவலர்கள் மற்றும் கோவில் பராமரிப்பாளர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கலாம் என்று தேவசம்போர்டு தரப்பில் கூறப்படுகிறது.
தடுத்து நிறுத்தப்பட்ட பெண்கள்
சபரிமலை வரும் பெண்கள் பம்பா மற்றும் மலை ஏறும் முன்னர் பெண் காவலர்கள் சோதனை செய்யப்படுகின்றனர். கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து கோவிலுக்குச் செல்ல தடை செய்யப்பட்ட வயதைத் சேர்ந்த 260 பெண்களை கண்டறிந்துள்ளதாகவும், இவர்கள் தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு சிலர் கேரளாவைச் சேர்ந்தவர்களாகவும் இருந்ததாக தேவசம்போர்டு குறிப்பிட்டுள்ளது.
வேதசம்போர்டு விடாப்பிடி
கோவிலில் கடைபிடிக்கப்படும் விதிகளை யாருக்காகவும் தளர்த்திக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்தால் கோவிலின் புனிதத் தன்மை கெட்டுப் போய்விடும் என்பது தேவசம்போர்டு நிர்வாகத்தினரின் கருத்தாக உள்ளது.
அரசியல் சாசன அமர்வு முன்பு வழக்கு
பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுப்புவதால் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்று கூறுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பெண்களை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மாநில அரசு தெரிவித்து விட்டது, எனினும் தேவசம்போர்டு எதிர்ப்பை அடுத்து இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.