புந்தல்கண்ட்டில்... ரூ. 4000 கோடி மதிப்பிலான தங்கம், பிளாட்டினம் கண்டுபிடிப்பு
லக்னோ: உ.பி. மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில், தாண்டியா கேடா கிராமத்தில், சாமியார் கனவில் வந்த புதையல் புதைந்திருக்கிறதா என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் பூமியை தோண்டிக் கொண்டிருக்கிறார்கள் ஒருபக்கம். மறுபக்கம், புந்தல்கண்ட் பகுதியில், ரூ. 4000 கோடி மதிப்பு்ள்ள தங்கம், பிளாட்டினம் மற்றும் பிற தாதுக்களின் இருப்பை மாநில தாது மற்றும் சுரங்கத்துறை ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த இடத்தில் பெருமளவிலான தாதுக்களும், உலோகங்களும் புதைந்திருப்பது தெரிய வந்துள்ளதாம்.
இந்த கண்டுபிடிப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டால், கிட்டத்தட்ட புந்தல்கண்ட் பிரதேசத்தின் 7 மாவட்டங்கள் பெரும் வருவாய் தரும் மாவட்டங்களாக, அதாவது பணங்காய்ச்சி மாவட்டங்களாக உருவெடுக்கும்.
ஜான்சி முதல் லலித்பூர் வரை
ஜான்சி, ஜலான், மஹோபா, ஹமீர்புர், பண்டா, சித்ரகூட், லலித்பூர் ஆகியவை புந்தல்கண்ட் பகுதியில் உள்ளன. இவை பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதிகளாகும்.
வருவாய்ச் சுரங்கமாகுமா...?
தற்போது இந்தப் பகுதியில்தான் பெருமளவிலான உலோகங்கள், தாதுப் படிவுகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள தாதுக்கள், உலோகங்களின் மதிப்பு மட்டும் ரூ. 4000 கோடி என்று கூறுகிறார்கள்.
சோன்பத்ராவில் தங்கம்
சோன்பத்ரா என்ற இடத்தில், தங்கப் படிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புந்தல்கண்ட்டிலும் தங்கம்
புந்தல்கண்ட் பகுதியிலும், சோன்பத்ராவிலும் தங்கம் படிந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில மண்ணியல் மற்றும் சுரங்கங்களுக்கான இயக்குநர் பாஸ்கர் உபாத்யாய் கூறியுள்ளார்.
அரசுக்குத் தாக்கல்
இந்த கண்டுபிடிப்புகள் தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. இறுதி அறிக்கையும் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாம்.
தங்கம், பிளாட்டினம், பொட்டாஷ், ஆஸ்பெஸ்டாஸ், சிலிக்கா...
புந்தல்கண்ட் பகுதியில் தங்கம், பிளாட்டினம் ஆகியவை மட்டுமல்லாமல், பொட்டாஷ், ஆஸ்பெஸ்டாஸ், சிலிக்கா போன்றவையும் பெருமளவில் படிந்ததிருப்பதாக கருதப்படுகிறது. இந்த தாதுக்களின் மதிப்பு ரூ. 1000 கோடியாக இருக்கும் என்று தெரிகிறது.
இப்போதைக்கு இந்த 'மைட்'தான்...
தற்போது உ.பியில் டயஸ்போர், டாலமைட், லைம்ஸ்டோன், மாக்னசைட், பாஸ்போரைட் ஆகிய தாதுக்கள் இருப்பதாகவே கருதப்பட்டு வந்தது. இவையும் கூடிய அளவில் சிறியவைதான். அதேசமயம், தற்போது பெருமளவிலான பெரிய அளவிலான தாதுக்களும், தங்கம், பிளாட்டினம் போன்றவையும் புதைந்திருப்பது வெளியே வந்துள்ளது.
லலித்பூரில் தங்கப் புதையல்
லலித்பூர் மாவட்டம் கிரார் - டோரி, குட்கவான் பகுதிகளில் தங்கப் படிவுகள் இருக்கிறதாம். இங்கு மூன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு தங்கப் படிவுகள் இருப்பது கடந்த 1995-96ல் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பகுதியில் கிட்டத்தட்ட 140 கிலோ தங்கம் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இவற்றின் சந்தை மதிப்பு ரூ. 43 கோடியாகும். அதேபோல பெர்வார் என்ற இன்னொரு கிராமத்தில், ரூ. 26.25 கோடி மதிப்பிலான 87.5 கிலோ தங்கம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜான்சியில் சிலிக்கா
ஜான்சியில் பெருமளவிலான சிலிக்கா இருப்பது தெரிய வந்துள்ளது. அங்கு ரூ. 890 கோடி மதிப்பிலான 4.5 கோடி டன் சிலிக்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.