விலங்குகளை போல கூண்டில் இருக்கும் காஷ்மீர் மக்கள்.. அமித் ஷாவுக்கு இல்டிஜா பரபரப்பு கடிதம்
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மகள், இல்டிஜா ஜாவேத், தனது தாயை போலவே, தானும் தனது வீட்டில் பாதுகாப்பு படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி இரண்டாவது வாய்ஸ் மெசேஜை வெளியிட்டுள்ளார்.
மேலும், மீண்டும் ஊடகங்களுடன் பேசினால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்று தாங்கள் அச்சுறுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இல்டிஜா ஜாவேத் கடிதம் எழுதியுள்ளார்.
காஷ்மீர் மக்கள் விலங்குகளைப் போல கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர், அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன என்று அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், முன்னாள் முதல்வர்களான முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான், இல்டிஜா ஜாவேத் அமித்ஷாவுக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இன்று நாட்டின் பிற பகுதிகள் இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே வேளையில், காஷ்மீரிகள் விலங்குகளைப் போல கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. எனது ஊடக பேட்டிகளால் என்னை வீட்டிலேயே தடுத்து வைத்துள்ளோம் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். நான் பேசினால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தப்பட்டேன்.
இந்தியாவிற்கு ஷாக்.. ஐநாவின் ரகசிய ஆலோசனை.. காஷ்மீர் பிரச்சனையில் சீனா போடும் திட்டம் என்ன?
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இது. ஆனால் ஒரு குடிமகனுக்கு பேச உரிமை இல்லை. இது கற்பனை செய்து பார்க்கவும் சிரமமாக உள்து. உண்மையை கூறியதற்காக நான் ஒரு போர்க்குற்றவாளியாக நடத்தப்படுகிறேன் என்பது ஒரு சோகமான முரண்.
இவ்வாறு தனது கடிதத்தில் ஜாவேத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒரு வாய்ஸ் மெசேஜும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: நான் ஒரு குற்றவாளியைப் போல நடத்தப்படுகிறேன், நான் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறேன். என்னைப் போலவே வெளிப்படையாக பேசிய காஷ்மீர் மக்களின் வாழ்க்கைக்கும் சேர்த்தே நான் அஞ்சுகிறேன்.
காஷ்மீரில் தொலைபேசி சேவைகள் மற்றும் இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, மேலும் ஊரடங்கு உத்தரவு போன்ற கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. உயர் அதிகாரிகள் தங்களது தகவல் தொடர்புக்கு, செயற்கைக்கோள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர்.