பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்: ராஜ்யசபாவில் திமுக எம்பி திருச்சி சிவா
டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று ராஜ்யசபாவில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தினார்.
ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் கடந்த 24 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது தொடர்பான வழக்கில் கடந்த டிசம்பர் 2-ந் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், குற்றவியல் சட்டம் 435-ன் கீழ் 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதல் அவசியம்; அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் மாநில அரசுக்குள்ள உரிமைகளின் அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்வதை யாரும் தடுக்க முடியாது என தெரிவித்தது.
இந்நிலையில் "7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது; இது குறித்து கருத்து தெரிவிக்க" கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இக்கடிதத்தை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியிருந்தார்.
இதனிடையே ராஜ்யசபாவில் இன்று பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 24 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்; அவர்களை விடுதலை செய்ய வேண்டும்; இது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்துக்கு மத்திய அரசு விரைவாக பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு
மேலும் ராஜ்யசபாவில் பேசிய அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், மருத்துவ படிப்புகளுக்கு தமிழக கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என கோரிக்கை விடுத்தார்.