புதிய பிரதமருக்காக காத்திருக்கும் நாடு..! எதிர்க்கட்சிகளின் கொல்கத்தா பேரணி சொல்லும் சேதி இதுதான்
Recommended Video
கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்தியாவின் அடுத்த பிரதமரை உருவாக்கும் முயற்சியின் முக்கிய கட்டமாக, பாஜகவை வீழ்த்தும் வண்ணம் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு மிகப்பெரிய பேரணியை நடத்துகின்றன. கிட்டத்தட்ட 22 கட்சிகளின் தலைவர்கள், பாஜக எதிர்ப்பு நிலையை எடுத்திருக்கும் அமைப்புகள் இதில் கலந்து கொள்கின்றன.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேடு மைதானத்தில், இன்று பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இதில் கலந்துகொள்ள காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மாநில எதிர்கட்சிகளுக்கும், பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காங். கார்கே பங்கேற்கிறார்
மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக கருதப்படும் இந்த பொதுக் கூட்டத்தில் உ.பி.யின் ராஷ்டிரிய லோக் தளம் சார்பில் அஜித் சிங் மற்றும் ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொள்கிறார்.
ராகுல், சோனியா பங்கேற்கவில்லை
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி பங்கேற்கவில்லை. எனினும், அக்கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துத் தெரிவித்து ராகுல் காந்தி கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
வாழ்த்திய ராகுல்
அதில் அவர் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்துவதிலும், ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதிலும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அந்த வகையில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையைக் காக்கும் வகையில் ஒரு பிரமாண்ட பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அரசியல் கலக்கக்கூடாது
இந்த பேரணி குறித்து சமாஜ்வாடி கட்சியின் துணைத் தலைவர் கிரண்மாய் நந்தா கூறுகையில், இது பாஜகவுக்கு எதிரான பேரணி என்பதால் பல எதிர்க்கட்சிகள் பங்கேற்கின்றன. அதில் நாங்களும் கலந்து கொள்கிறோம். உத்தரப் பிரதேச அரசியலுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். அந்த கருத்தை பிரதிபலிக்கும் விதமாக, மாநில அரசியலின் கட்டாயத்தால் ஏற்படும் சூழலை, இந்த பேரணியின் மிகப் பெரிய அரசியல் காரணத்துடன் கலக்கக் கூடாது என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியிருக்கிறது.
பங்கேற்போர் விவரம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அவர்கள் தவிர, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பருக் அப்துல்லா, உமர் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், பாஜக அதிருப்தி எம்.பி சத்ருகன் சின்கா ஆகியோர் இந்த மெகா பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.
தனி விமானத்தில் ஸ்டாலின்
தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று ஸ்டாலின் இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்கிறார். இதற்காக, அவர் சென்னையில் இருந்து தனி விமானத்தில் கொல்கத்தா புறப்பட்டு சென்றிருக்கிறார். கொல்கத்தாவில் தங்கியுள்ள அவர், கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் சென்னை திரும்புகிறார்.
நாட்டுக்கு புதிய பிரதமர்
கொல்கத்தா பேரணியில் கலந்து கொள்ள அகிலேஷ் யாதவ் கொல்கத்தா சென்றார். அவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், இந்த நாடு புதிய பிரதமரை விரும்புகிறது. இந்த நாடு புதிய பிரதமருக்காக காத்திருக்கிறது.
மாற்றம் வரும் என நம்பிக்கை
கொல்கத்தாவில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ள அனைத்து தலைவர்களையும் மம்தா பானர்ஜி அழைத்துள்ளார். மேற்கு வங்க பேரணியில் இருந்து செல்லும் தகவல், மாற்றத்துக்கான தகவலாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
தொண்டர்கள் பாதுகாப்பு
மாநாட்டையொட்டுக்காக மேற்கு வங்கம் முழுவதும் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்ட திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கொல்கத்தாவில் குவிந்து உள்ளனர். போலீஸார் மற்றும் திரிணமூல் தொண்டர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மைதானம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. தொண்டர்கள் தங்குவதற்காக ஆங் காங்கே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
|
பங்கேற்காதவர்கள் யார்?
தெலுங்கானாவின் ஆளும் கட்சி யான தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஆந்திராவின் முக்கிய எதிர்க்கட்சி யான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, ஒடிசாவின் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பாஜக, காங்கிரஸ் இல்லாத கூட்டணியை ஆதரிக்கின்றன. அந்த வகையில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் மாநாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என்று அந்த கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் மாநாட்டை முற்றிலுமாக புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.