நான் தவறு இழைத்துவிட்டேன்.. ராஜினாமா கடிதம் மீது தீதி நடவடிக்கை எடுக்கக் கூடாது.. ஜிதேந்திர திவாரி
கொல்கத்தா: நான் தவறு இழைத்துவிட்டேன், நான் கொடுத்த ராஜினாமா கடிதம் மீது மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேட்டுக் கொள்வதாக திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிதேந்திர திவாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் பாஜக பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இந்த நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அமைச்சர் சுவேந்து அதிகாரி, பாரக்பூர் தொகுதி திரிணமூல் எம்எல்ஏ ஷில்பத்ரா தத்தா, பந்தபேஷ்வர் தொகுதி எம்எல்ஏ ஜிதேந்திர திவாரி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
சிபிஎம் பெண் எம்எல்ஏ தப்சி மண்டல் ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் 24 மணி நேரத்தில் தனது முடிவை திவாரி மாற்றிக் கொண்டார். இதையடுத்து அவர் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் அரூப் பிஸ்வாஸையும் தேர்தல் வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோரையும் சந்தித்தார்.
அப்போது திவாரி கூறுகையில் ராஜினாமா செய்தது எனது தவறு. சில தவறான புரிதல்கள் இருந்தன. இது முற்றிலும் எனது தவறே. எனது செய்கையால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயமடைந்ததாக எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தீதியை புண்படுத்தும் எதையும் என்னால் செய்ய முடியாது.
நான் தனிப்பட்ட முறையில் மம்தா தீதியை சந்தித்து மன்னிப்பு கோருவேன். திரிணமூல் காங்கிரஸில் தொடர்ந்து பணியாற்றுவேன். எனது ராஜினாமா கடிதம் மீது தீதி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றார் திவாரி.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திவாரியின் ராஜினாமா கடிதம் இருக்கிறது. திரிணமூல் காங்கிரஸில்தான் திவாரி அன்று இருந்தார், இன்று இருக்கிறார், நாளையும் அவர் இங்குதான் இருப்பார். அனைத்து குடும்பங்களிலும் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். ஆனால் அது சரி செய்யப்படும் என்றார்.