அமித் ஷா..! உங்களுக்கு தில் இருந்தா தனியா நில்லுங்க..பாஜகவை வம்பிழுக்கும் திரிணாமூல் காங்கிரஸ்
கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 லோக்சபா தொகுதிகளில், ஏதேனும் ஒரு தொகுதியில் நின்று பாஜக தலைவர் வெற்றி பெற முடியுமா என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தல் களத்தை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி விட்டன. பாஜக ஒருபக்கமும், காங்கிரஸ் ஒரு பக்கமும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசுக்கு வெறும் 2 இடங்களை மட்டும் கொடுத்துவிட்டு, பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதியும் தலா 38 தொகுதிகளில் போட்டியிட போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
டெல்லியில் கட்சியின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டத்தை கூட்டியுள்ள பாஜகவும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று சூளுரைத்துள்ளது. மோடியை வெல்ல யாராலும் முடியாது என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா முழங்கி உள்ளார். எதிர்க்கட்சிகளின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்றும் அவர் கூறியுள்ளார்.
சவால்விடும் அபிஷேக் பானர்ஜி
இந் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள எந்த தொகுதியிலாவது அமித் ஷா நின்று வென்று காட்ட முடியுமா என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியும், அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபிஷேக் பானர்ஜி சவால் விடுத்துள்ளார். கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்த போது இந்த சவாலை விடுத்துள்ளார்.
அமித் ஷாவுக்கு பானர்ஜி சவால்
அவர் மேலும் கூறியதாவது:மேற்கு வங்கம் தான் அடுத்த குறி என்று அமித் ஷா கூறி வருகிறார். அவருக்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன். உண்மையிலேயே உங்களுக்கு(அமித் ஷா) தில் இருந்தால் 42 தொகுதிகள் உள்ள மேற்கு வங்கத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெறமுடியுமா?
கட்சியில் நீக்கப்படும் நபர்கள்
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து யார், யாரெல்லாம் விலக்கப் படுகிறார்களோ அவர்களை பாஜக சேர்த்துக் கொள்கிறது. எங்கள் கட்சியை குப்பை தொட்டியாக ஆக்க விரும்பாததால் அவர்களை வெளியே அனுப்புகிறோம்.
முத்து என்று சொல்லும் பாஜக
ஆனால் அவர்களை பாஜக முத்து என்று கூறி கட்சியில் சேர்த்து கொள்கிறது. பாஜகவுக்கு முக்கியமான ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். 22 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று அமித் ஷா கூறி வருகிறார். ஆனால்.. அவர்களால் 42 தொகுதிகளில் ஒன்றில் கூட ஜெயிக்க முடியாது என்று கூறினார்.