எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்தார் ரஜீப் பானர்ஜி... பாஜக.,வில் இணைவாரா
கொல்கத்தா : திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரஜீப் பானர்ஜி தனது எம்எல்எ பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரைவில் இவர் பாஜக.,வில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த வாரம், மேற்குவங்க முதல்வர் மம்தா பாஜர்னியிடம் ராஜினாமா கடிதம் அளித்தார் ரஜீப். இந்நிலையில், இன்று தனது தோம்ஜூர் தொகுதி எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இவர் வரும் ஜனவரி 31 அன்று டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜக.,வில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மம்தா பானர்ஜி அரசில் இரண்டு முறை எம்எம்ஏ.,வாக இருந்தவர் ரஜீப். இவர் தனது ராஜினாமா பற்றி கூறுகையில், நான் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். இது தொடர்பான கடிதத்தை சபாநயகரிடம் அளிக்க உள்ளேன். தனது ஆட்சியில் எனக்கு தொடர்ந்து வாய்ப்பளித்த கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு எனது நன்றிகள் என தெரிவித்துள்ளார்.
மேலும் தோம்ஜூர் தொகுதியில் மக்களுக்காக தொடர்ந்து சேவையாற்றுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த போது, ரஜீப்பை தங்கள் கட்சிக்கு வர பாஜக அழைப்பு விடுத்திருந்தது.
தற்போது எம்எல்ஏ பதவியையும் ரஜீத் ராஜினாமா செய்துள்ளது பற்றி கூறிய தற்போதைய பாஜக எம்பி.,யும் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான அர்ஜூன் சிங், அவர் எனது இளைய சகோதரர் போன்றவர். அவருக்காக பாஜக.,வின் கதவுகள் திறந்திருக்கும் என்றார்.
மம்தா அமைச்சரவையில், கடந்த 6 வாரங்களில் பதவியை ராஜினாமா செய்யும் 3 வது அமைச்சர் இவர் ஆவார். கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியே அமைச்சர்களின் இந்த தொடர் ராஜினாமாவிற்கு காரணம் என கூறப்படுகிறது.