"முத்தலாக் "அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்
முத்தலாக் முறை சம உரிமைக்கு எதிராக அமைந்திருப்பதால் அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: மூன்று தலாக் சொல்லி திருமண உறவை முறித்துக்கொள்ளும், நடைமுறைக்கு தடை விதிக்க கோரி முஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் முத்தலாக் முறையை அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாக அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
இஷ்ரத் ஜகான் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மூன்று முறை தலாக் என கூறி மனைவியை கணவன் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு, இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது.
முஸ்லிம் தனிநபர் சட்டம்-1937 (ஷரியத்), பிரிவு-2ல் இதற்கு அனுமதியுள்ளது. இந்த அனுமதி பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14ன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள, உரிமை மீறப்படுகிறது. எனவே தலாக் நடைமுறையை நீக்க வேண்டும் என்று அந்த பெண்மணி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பான வழக்கில் முத்தலாக் முறை சம உரிமைக்கு எதிராக அமைந்திருப்பதால் அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், முத்தலாக் முறை இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்றும் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், மூன்று தலாக் நடைமுறையை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.