சாக விடுங்கள்.. முத்தலாக்கை எதிர்த்து தலைமை நீதிபதிக்கு முஸ்லிம் பெண் ரத்தத்தில் கடிதம்!
சாக விடுங்கள் என்று முத்தலாக்கை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு முஸ்லிம் பெண் ஷபானா ரத்தத்தில் கடிதம் எழுதி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.
டெல்லி: முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண் ஷபானா தனக்கு நீதி வேண்டும் என்றும் இல்லை என்றால் தன்னை சாகவிடுங்கள் என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூருக்கு ரத்தத்தில் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஷபானா. இவரது கணவர் திப்பு ஷா. நர்சிங் படித்த இவர், மருத்துவமனைக்குச் சென்று நர்சாக பணியாற்ற விரும்பினார். இதனை அவரது கணவர் திப்பு ஷா கடுமையாக எதிர்த்துள்ளார். மேலும், வயல்களில் வேலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதனை ஷபானாவால் ஏற்க முடியவில்லை.
இதனால் இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, வரதட்சணை கேட்டும் திப்பு ஷா, ஷபானாவை கொடுமை செய்துள்ளார். இதற்கு மறுத்த ஷபானாவை முத்தலாக் செய்து விட்டு இரண்டாவது திருமணமும் திப்பு ஷா செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த ஷபானா சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூருக்கு ரத்தத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், தனக்கு நீதி வேண்டும் என்றும் இல்லை என்றால் சாகவிடுங்கள் என்றும் உருக்கமாக ஷபானா எழுதியுள்ளார். மேலும், தன்னுடைய மற்றும் தன்னுடைய 4 வயது பெண் குழந்தையின் வாழ்வை அழிக்கும் இந்த முத்தலாக்கை தடை செய்யவும் அவர் கோரியுள்ளார்.