முத்தலாக் மசோதா நாளை ராஜ்யசபாவில் தாக்கல்.. வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்
முத்தலாக்கை தடை செய்யும் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்க்க திட்டமிட்டுள்ள எதிர்க்கட்சிகள், அதனை தேர்வு குழுவிற்கு அனுப்ப முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
டெல்லி: மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றாமல் தடுக்கும் விதமாக அதனை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப செய்யும் முயற்சியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
முஸ்லிம்களிடையே முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் நடைமுறை இருந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதை தாக்கல் செய்தார். இந்த மசோதாவில், 3 ஆண்டுகள் சிறை தண்டனை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்டன.
உறுப்பினர்கள் விவாதத்திற்கு பிறகு, இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா நாளை மாநிலங்களவைக்கு விவாதத்திற்கு வருகிறது. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து, அதனை தேர்வு குழுவுக்கு அனுப்ப பரிந்துரை செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக அனைத்து கட்சியினரிடம் கோரிக்கை விடுத்திருந்த பிரதமர் மோடி, ஒருமித்த கருத்துடன் இந்த மசோதாவை நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் இந்த மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பிக்கள் முத்தலாக் மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் செயல்படவில்லை என்றும் அதிலுள்ள சில கருத்துகளுடன் தான் காங்கிரஸ்க்கு உடன்பாடில்லை எனத் தெரிவித்தனர்.மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கை ஓங்கியுள்ளதால் முத்தலாக் சட்டம் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும்.