தூக்கு தண்டனையை ஒழிக்கும் தீர்மானம்... திரிபுரா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றம்
அகர்தலா : தூக்கு தண்டனையை ஒழிப்பதற்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி திரிபுரா மாநிலம் முன்னோடியாக விளங்கியுள்ளது.
உலகில் பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்தியாவிலும் மரண தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அந்த வகையில், திரிபுரா மாநில சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் இன்று தனி நபர் தீர்மானத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஜிதேந்திர சர்க்கார் கொண்டு வந்தார்.
"இந்திய தண்டனைச் சட்டம் 302-வது பிரிவின்படி நீதிமன்றங்கள் மரண தண்டனை விதிக்கின்றன. இதற்கு பதிலாக, கொடிய குற்றங்கள் செய்வோர் சாகும் வரையில் தண்டனை அனுபவிக்கும் வகையில் ஆயுள் தண்டனை வழங்க சட்டத்தில் தேவையான திருத்தங்களை கொண்டுவரும்படி இந்த சட்டமன்றம் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது" என அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ஜிதேந்திர சர்க்கார், "தற்போது, அரிதினும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை வழங்கப்பட்டாலும்கூட, மனிதநேய கண்ணோட்டத்தின்படி இந்த சட்டத்தை மாற்ற வேண்டும். உலகில் ஒவ்வொரு உயிரும் வாழ்வதற்கு உரிமை உள்ளது. மரண தண்டனை கொடுப்பதால் கொடுங்குற்றங்களை குறைக்க முடியாது" என்றார்.
இந்த தீர்மானத்தை ஆதரித்து முதலமைச்சர் மாணிக் சர்க்கார், சட்டத்துறை அமைச்சர் தாபன் சக்கரவர்த்தி, எதிர்க்கட்சி தலைவர் சுதிப் ராய் பர்மான் (காங்கிரஸ்) உள்ளிட்ட பலர் பேசினர். அப்போது, கடவுள் மட்டுமே உயிரை படைப்பதாகவும், அந்த உயிரை பறிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் மகாத்மா காந்தியின் கருத்தை குறிப்பிட்டு சுதிப் ராய் பேசினார்.
பின்னர் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனை ஆதரித்து அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்தனர். எனவே, எந்த எதிர்ப்பும் இன்றி தூக்கு தண்டனையை அறவே ஒழிக்கும் தீர்மானம் திரிபுரா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.