மூன்று ஊழியர்கள் கொலை- திரிபுரா பத்திரிக்கை ஆசிரியர் குற்றவாளி: கோர்ட் தீர்ப்பு!!
திரிபுராவில் வெளிவரும் நாளேடு டெய்னிக் கன்தூத். இந்நாளேட்டில் பணிபுரிந்து வந்த மேலாளர் ரஞ்சித் சவுத்ரி, ப்ரூஃப் ரீடர் சுஜித் பட்டாசார்ஜி, ஓட்டுநலர் பலராம் கோஷ் ஆகியோர் கடந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை சம்பவத்தின் போது உரிமையாளரும் ஆசிரியருமான சுஷில் சவுத்ரியும் அலுவலகத்தில்தான் இருந்திருக்கிறார்.
ஆனால் தமது அலுவலகம் மீது வெளியாட்கள் தாக்குதல் நடத்தி மூவரையும் கொலை செய்துவிட்டதாக போலீசில் புகார் செய்தார் சுஷில் சவுத்ரி. அத்துடன் கொலையாளிகள் பற்றிய தகவல் தருவோருக்கு ரூ10 லட்சம் சன்மானம் தருவேன் என்றும் அறிவித்தார்.
சுஷில் சவுத்ரி அலுவலகத்தில் இருக்கும் போதே கொலைகள் நடந்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்தார். கடைசியாக சுஷில் சவுத்ரியின் நில மோசடிகளை அம்லப்படுத்துவேன் என்று மேலாளர் மிரட்டியதால் அவர் கொல்லப்பட்டார்; அவர் கொலை செய்யப்படுவதை பார்த்ததால் ப்ரூஃப் ரீடர் கொலை செய்யப்பட்டார். பின்னர் சாட்சியாக இருந்த ஓட்டுநர் பலராம் கோஷையும் சுஷில் சவுத்ரி கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி சுஷில் சவுத்ரியை போலீசார் கைது செய்தனர். கொல்லப்பட்ட ஓட்டுநர் பலராம் கோஷுவின் மனைவி நியாதியும் அப்ரூவர் ஆகி உண்மையை விளக்கினார்.
இந்த வழக்கில் நேற்று அகர்தலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூன்று ஊழியர்கள் கொலை வழக்கில் டெய்னிக் கன்தூத் அதிபர் சுஷில் சவுத்ரி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை நாளை மறுநாள் அறிவிக்கப்பட இருக்கிறது.