பணபலத்தால் மட்டுமே வென்ற பாஜகவிடம் திரிபுரா மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சீதாராம் யெச்சூரி
பணபலத்தால் மட்டுமே வென்ற பாஜகவிடம் திரிபுரா மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
டெல்லி : தனது பணபலத்தை மட்டுமே பயன்படுத்தி திரிபுராவில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. திரிபுரா மாநில மக்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை பாஜக தோற்கடித்து அம்மாநிலத்தில் வெற்றிவாகை சூடியுள்ளது. இதன் மூலம் கம்யூனிஸ்ட்டுகள் அங்கு ஆட்சியை இழந்துள்ளதுள்ளனர். இது நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, பணபலத்தை மட்டுமே பயன்படுத்தி பாஜக வெற்றிபெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நிலை மாறி உள்ளது
மேலும், திரிபுரா சட்டசபைத் தேர்தலில் பாஜக - ஐ.பி.டி.எப் கூட்டணி அரசு அமைவதற்கு மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் கூட்டணி தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று 25 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அந்த நிலை தற்போது மாறியுள்ளது. இருப்பினும் 45 சதவீத மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.
கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரானவர்கள்
தேர்தல் முடிவுகளை எங்கள் கட்சி ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார். மேலும், மிகப்பெரிய அளவில் பணபலத்தையும், ஆள்பலத்தையும் பயன்படுத்தியதாலேயே பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரானவர்களோடு கூட்டணி வைத்து எங்களை தோற்கடித்து இருக்கிறார்கள்.
மக்களுக்கு எச்சரிக்கை தேவை
இதற்கு பாஜக எந்தவித தார்மீக நெறிகளையும் பின்பற்றவில்லை. கம்யூனிஸ்ட்டுகளை எதிர்ப்பதற்காக பல சக்திகளை இணைத்து இரு கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இதன் பின் விளைவுகள் கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே திரிபுரா மாநிலமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
அதிகார, ஆள் பண பலம்
இது கம்யூனிஸ்ட்டுகளின் வளர்ச்சியில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. நாங்கள் தொடர்ந்து மதவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவோம். அதிகார , ஆள் மற்றும் பண பலமே பாஜகவை திரிபுராவில் வெற்றி பெற வைத்துள்ளது. இதனால் கம்யூனிஸ்ட் கட்சி துவண்டுவிடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.