அங்கேயும் நம்ப வைத்து கழுத்தறுத்த பாஜக... கொந்தளிக்கும் திரிபுரா பழங்குடிகள் போர்க்களத்தில்!
தங்களது முதுகில் குத்திய பாஜகவுக்கு எதிராக திரிபுராவில் பழங்குடிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
Recommended Video
அகர்தலா: திரிபுராவில் ஆட்சியை கைப்பற்ற உதவியாக இருந்த பழங்குடிகள் கட்சிக்கு கொடுத்த 'தன்னாட்சி' பிரதேச வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என பாஜக அறிவித்திருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது முதுகில் ஏறி சவாரி செய்துவிட்டு அதே முதுகில் குத்திவிட்ட பாஜகவை கண்டித்து திரிபுரா பழங்குடிகள் இப்போது கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திரிபுராவில் கால் நூற்றாண்டு காலம் இடதுசாரிகள் ஆட்சி இருந்து வந்தது. இம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தது.
பாஜகவுக்கு அடிப்படை பலமே இல்லாத நிலையில் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையும் அப்படியே கபளீகரம் செய்தது பாஜக. அத்துடன் திரிபுரா பழங்குடி மக்களின் செல்வாக்குமிக்க ஐடிபிஎப் கட்சியுடன் கூட்டணியும் வைத்தது பாஜக.
இந்த கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, திரிபுராவில் பழங்குடிகள் வாழும் 7,000 ச.கி.மீ பரப்பளவை ஒருங்கிணைத்து ஒரு தன்னாட்சிப் பகுதியாக மாற்றுவோம். இதற்கான அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வோம் என பாஜக உறுதி மொழி அளித்தது. இந்த உறுதிமொழியை அளித்தவர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.
இதனை நம்பி பாஜகவைக்கு திரிபுரா பழங்குடிகள் தங்களது வாக்குகளை மொத்தமாக அள்ளிக் கொட்டினர். பாஜகவும் துள்ளி குதித்தபடி ஆட்சியில் அமர்ந்தது.
இப்போது திரிபுரா பழங்குடிகள் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்னாச்சு என கேட்கின்றனர். ஆனால் பாஜகவோ அப்படியெல்லாம் அரசியல் சாசன திருத்தம் செய்யவே முடியாது என முதுகில் குத்திவிட்டது.
இதனால் கொந்தளித்து போயிருக்கின்றனர் திரிபுரா பழங்குடிகள். பாஜகவின் துரோகத்தைக் கண்டித்து போராட்டத்தை தொடங்கியுள்ள பழங்குடிகள், எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் திப்ரலாந்து தனி மாநில கோரிக்கைக்கான போராட்டம் போல மிகப் பெரும் போராட்டத்தை பாஜக அரசுக்கு எதிராக நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.