உத்தரகண்ட் வெள்ளம்: இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி... மாநில முதல்வர் அறிவிப்பு!
டேராடூன்: உத்தரகண்ட் வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.
மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் மோடி என்னிடம் உறுதி அளித்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர், குடியரசு தலைவரும் என்னிடம் தொலைபேசி மூலம் நிலைமையை கேட்டறிந்தனர் என்றும் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்தார்.
இரண்டு மடங்கு வேகமாக உருகும்... இமயமலை பனிப்பாறைகள்... பேரபாயம் ஏற்பட வாய்ப்பு
திடீர் வெள்ளம்
உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை ஒன்று திடீரென்று சரிந்து விழுந்ததது. இதனால் அங்குள்ள அலக்நந்தா தவுளிகங்கா நதிகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
10 உடல்கள் மீட்பு
வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக ரைனி கிராமத்தில் தவுலி கங்கை நதிக்கரையில் இருந்த பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. அங்கு தொடர்ந்து பல்வேறு மீட்பு படைகளின் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
16 தொழிலாளர்கள் மீட்பு
இந்த வெள்ளத்தால் சமோலி மாவட்டத்தில் தபோவனம் அணை அருகே சுரங்கத்தை வெள்ளம் சூழ்ந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி இருந்த 16 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அங்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
மோடி உறுதியளித்தார்
அப்போது அவர் கூறியதாவது:- உத்தரகண்டில் திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளம் மிகவும் துயரமானது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் மோடி என்னிடம் உறுதி அளித்துள்ளார். உள்துறை அமைச்சர், குடியரசு தலைவரும் என்னிடம் தொலைபேசி மூலம் நிலைமையை கேட்டறிந்தனர்.
ரூ.4 லட்சம் வழங்கப்படும்
இந்திய ராணுவம் சம்பவ இடத்தை அடைந்துள்ளது. உபகரணங்களுடன் 60 எஸ்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள் குழுவினர் வந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடந்து வருகிறது. உத்தரகண்ட் வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கபப்டும்.
125 பேர் மாயமாகி உள்ளனர்
180 ஆடுகள் மற்றும் ஆடுகளுடன் மேய்ப்பர்கள் உட்பட ஐந்து உள்ளூர்வாசிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். சுமார் 125 பேரைக் காணவில்லை என்று கருதுகிறோம். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சுகிறோம் பனிப்பாறை வெடித்ததன் காரணத்தை வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் அரசு இப்போது மக்களின் உயிரைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்துகிறது என்று திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.