மான் வேட்டையாடிய வழக்கில் ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு.. சல்மான்கானுக்கு மீண்டும் சிக்கல்
மான் வேட்டையாடிய வழக்கில் விடுவிக்கப்பட்ட நடிகர் சல்மான் கானுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு செய்துள்ளதால் அவருக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டெல்லி: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு எதிராக மான்கள் வேட்டையாடிய வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை ஏற்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் அவர் மீண்டும் சிக்கலில் தவித்து வருகிறார்.
18 வருடத்துக்கு முன்பு மான்கள் வேட்டையாடியதாக தொடரப்பட்ட இரு வழக்குகளில் இருந்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை விடுவித்து ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனை எதிர்த்து அந்த மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை ஏற்றுக்கொண்டு சல்மான் கானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், தற்போது மீண்டும் சல்மான் கானுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
நடிகர் சல்மான்கான் 2 மான்களை வேட்டையாடி கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதாவது கடந்த 1998 செப்டம்பர் 26, 28-ம் தேதிகளில் முறையே ஜோத்பூர் பாவத்திலும், கோதா பண்ணையிலும் இரண்டு மான்களை படப்பிடிப்பின்போது வேட்டையாடி கொன்றதாக கூறப்பட்டது.
இந்த வழக்குகளில் விசாரணை நீதிமன்றம் சல்மான்கானுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. ஆனால், சல்மான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் அந்த வழக்குகளில் இருந்து அவரை குற்றமற்றவர் எனக் கூறி ஜுலை மாதம் விடுவித்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக ராஜஸ்தான் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அந்த மனு நீதிபதிகள் பானுமதி, ஏ.கே.சிக்கிரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் சல்மான் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பினர்.
மேலும், இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும் நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர்.