சந்திரசேகர ராவை முதல்வராக அறிவித்தால் காங்.க்கு அதிக எம்பி சீட்: டிஆர்எஸ் நிபந்தனை
டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் காங்கிரஸூடன் டிஆர்எஸ் கட்சியை இணைக்குமாறு சோனியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், இதை டிஆர்எஸ் ஏற்க மறுத்துள்ளது. இந்தக் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவை தெலுங்கானா மாநிலத்துக்கான முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு அதிக இடங்களை ஒதுக்கப்படும் என்று இந்தக் கட்சி அறிவித்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுடன் தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் வெள்ளிக்கிழமையன்று கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சத்தியநாராயணா, தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட்டால் டிஆர்எஸ் கட்சியை காங்கிரஸூடன் இணைக்கத் தயார் என்று சந்திரசேகர் ராவ் கூறியிருந்ததாகவும், தற்போது தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டதால் டிஆர்எஸ் கட்சி தன்னுடன் இணைவதை காங்கிரஸ் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் சோனியா காந்தியை டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கானா மாநிலத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக சோனியா காந்தியிடம் நன்றி தெரிவித்துக் கொண்டேன். அவருடன் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றார்.
தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி 10 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் சந்திரசேகர் ராவ், தொடக்கத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார். அந்த மாநில சட்டசபை துணைத் தலைவராக 2001 வரை இருந்த அவர், பின்னர் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி அக்கட்சியில் இருந்து விலகி டிஆர்எஸ் கட்சியைத் தொடங்கினார்.
பின்னர் தெலுங்கானா தனி மாநிலம் அமைத்தால் கட்சியையே காங்கிரஸுடன் இணைத்துவிடுவேன் என்றும் சந்திரசேகர் ராவ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது இணைப்புக்கு ராவ் தயாராக இல்லை.