நாட்டின் பெரும்பான்மை மாநிலங்கள் பாஜகவை புறக்கணித்துவிட்டன.. உண்மை சொல்லும் புள்ளி விவரம்
டெல்லி: நாடு முழுக்க, பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துவிட்டது என பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. 20 மாநிலங்களில் எங்கள் ஆட்சிதான் என்று கட்டாக் நகரில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
ஆனால், உண்மையில் நிலைமை என்ன? மொத்தமுள்ள 29 மாநிலங்களில், பாஜக பெரும்பான்மையோடு ஆட்சி நடத்துவது 10ல் மட்டுமேயாகும். அதிலும் வட மாநிலங்களில் மட்டும்தான் என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.
ஆனால், பாஜகவின் சித்தாந்தங்களை மொத்த இந்திய மக்களும் ஏற்றுக்கொண்டு, பிற கட்சிகொள்கைகளை காற்றில் பறக்கவிட ஆரம்பித்துள்ளதை போன்ற தோற்றமும், மொத்த இந்தியாவும் பாஜக ஆட்சியின்கீழ் இருப்பதை போன்ற தோற்றமும் தொடர்ச்சியாக, திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது
உத்தரபிரதேசம், ம.பி
சில புள்ளி விவரங்களை பார்த்தால் இந்த தகவலை அறிந்து கொள்ளலாம். உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 312 தொகுதிகளை வென்றது. இது ஒரு பெரிய வெற்றி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மத்திய பிரதேசத்தில், 230 தொகுதிகளில் 165 தொகுதிகளையும், ராஜஸ்தானில் 200ல் 163 தொகுதிகளையும், குஜராத்தில் 182ல் 99 தொகுதிகளையும், ஹரியானாவில் 90ல் 47 தொகுதிகளையும், உத்தராகண்டில் 70ல் 56 தொகுதிகளையும், ஹிமாச்சல பிரதேசத்தில் 86ல் 44 தொகுதிகளையும் பாஜக வென்று அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது.
பிற பகுதிகள் நிலை
மேற்கண்ட மாநிலங்கள் அனைத்துமே வட இந்தியாவில் உள்ளவை. வடகிழக்கில் திரிபுராவில் மட்டும் பாஜக தனி சக்தியோடு வென்றுள்ளது. 60 தொகுதிகளில் 35 பாஜக வசமுள்ளது. ஆனால், கம்யூனிச சித்தாந்தங்களை மக்கள் வெறுத்துவிட்டதாக ஒரு பிரச்சாரம் திரிபுராவில் செய்யப்பட்டு வருகிறது. அது தேசத்தின் கவனத்தை ஈர்க்க உதவியுள்ளது.
உடைக்கப்படும் கட்சிகள்
60 தொகுதிகளை கொண்ட, அருணாச்சல பிரதேசத்தில் 2014ல் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 11 தொகுதிகளை மட்டுமே வென்றது. காங்கிரஸ் 42 தொகுதிகளை வென்றிருந்தது. ஆனால், அங்கு கட்சி உடைக்கப்பட்டு, பாஜக ஆட்சி இப்போது நடந்து வருகிறது. பிற மாநிலங்களில் பாஜக நிலைமையும் நீங்கள் கவனித்தால் ஒரு உண்மை புலப்படும்.
குரூப்பில் டூப்
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளில், 122 தொகுதிகளில் பாஜக வென்றது. அசாமில் 126 தொகுதிகளில் 60 தொகுதிகளையும், பீகாரில் 243 தொகுதிகளில் 53 தொகுதிகளையும், ஜார்கண்டில் 81 தொகுதிகளில் 35 தொகுதிகளையும், ஜம்மு காஷ்மீரில் 89 தொகுதிகளில், 25லும், மணிப்பூரில் 60 தொகுதிகளில் 21, மேகாலயாவில் 60ல் வெறும் 2, நாகாலாந்தில் 60ல் வெறும் 12, கோவாவில் 40 தொகுதிகளில் வெறும் 13 தொகுதிகளையும்தான் பாஜக வென்றிருந்தது. தேர்தலுக்கு முன்பு அல்லது பின்பு கூட்டணி வைத்து, இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடித்து வைத்துள்ளது பாஜக.
மிக மோசம்
அசாம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீரில், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி வைத்திருந்த நிலையில் பிற மாநிலங்களில், பிறகு சந்தர்ப்ப அடிப்படையில் கட்சிகளை வளைத்து ஆட்சியில் உள்ளது. கேரளாவில் 140 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப்பில் 3 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது அக்கட்சி. மேற்கு வங்கத்தில் 295 தொகுதிகள் உள்ள நிலையில், 3ல் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவில் 119 தொகுதிகளில் வெறும் 5 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில் 4 தொகுதிகளிலும், 70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் 3 தொகுதிகளிலும், 147 தொகுதிகள் கொண்ட ஒடிசாவில் 10 தொகுதிகளிலும் மட்டுமே பாஜக வென்றுள்ளது.
மொத்த தொகுதிகளை பாருங்கள்
கர்நாடகாவை பொறுத்தளவில் 222 தொகுதிகளில் 104 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. 2 தொகுதிகளுக்கான தேர்தல் பொதுத் தேர்தலின்போது நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம், புதுச்சேரி, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பாஜகவால் ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற முடியவில்லை. மொத்தத்தில் நாட்டிலுள்ள 4,139 சட்டசபை தொகுதிகளில், பாஜகவிற்கு 1516 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். அதிலும் 950 எம்எல்ஏக்கள், உத்தரபிரதேசம், ம.பி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் இருந்து மட்டுமே உள்ளனர்.