காஷ்மீரின் உண்மை நிலை தெரிந்துவிடும் என்பதற்காக எங்களை உள்ளேயே விடவில்லை.. திருச்சி சிவா ஆவேசம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அந்த மாநிலத்தில் உள்ள நிலைமையை நேரில் பார்த்து ஆய்வு செய்வதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தலைமையில், எதிர்க் கட்சித் தலைவர்களின் குழுவொன்று இன்று காஷ்மீர் சென்றிருந்தது.
காஷ்மீர் ஆளுநரின் அழைப்பை ஏற்று இந்த குழு சென்றிருந்த போதிலும் கூட, அவர்களை உள்ளே விடாமல் விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.
டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா கூறியதாவது: நாங்கள் ஸ்ரீநகர் சென்றவுடன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் வருகை தந்து எங்களுக்கு வெளியே செல்ல அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.
பசங்களா நல்லா படிங்க!.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்
எழுத்துப்பூர்வமாக இதற்கான உத்தரவு இருக்கிறதா என்று கேட்டோம். அப்போது ஒரு கடிதத்தை எடுத்து காண்பித்தனர். அந்த கடிதத்தில் நாங்கள் அங்கு சென்று மக்களை போராட்டத்திற்கு தூண்டிவிட போவதாகவும், எனவே அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
ராகுல்காந்திக்கு தனி விமானம் தருவதாக காஷ்மீர் ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். நாங்கள்தான் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி விமானத்தில் ஒரு குழுவாக சென்றோம். நாங்கள் வந்த நோக்கத்தை நீங்கள் தவறாக சித்தரிக்க கூடாது என்று சொன்னோம். நாங்கள் கூறியதை கடிதமாக எழுதி கையெழுத்திட்டு கொடுத்தோம். அதை ஆளுநரிடம் தருவதாக தெரிவித்து விட்டனர்.
நாங்கள் வந்த நோக்கம் இங்கு உள்ள நிலைமையை பார்ப்பதற்காகவும், மக்களுக்கு ஆதரவு தருவதற்காகவும் தானே தவிர வேறு எந்த காரணமும் கிடையாது. அனைவருமே பொறுப்புள்ள அரசியல் கட்சித் தலைவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். எனவே எங்களை பற்றி தவறாக சித்தரித்ததை, ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களை சுதந்திரமாக வெளியே செல்லக்கூடாது என்று கூறியது அரசியல் சாசனத்தின் தரப்பட்டுள்ள அடிப்படை உரிமையை மீறுவதாகும், என்று நாங்கள் எழுதி கையெழுத்திட்டு அதை ஆளுநருக்கு கொடுத்து அனுப்பி உள்ளோம்.
ராகுல்காந்தி, காஷ்மீருக்கு வருகை தரலாம் என்று அந்த மாநில ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். அதன் பேரில்தான் நாங்கள் சென்றிருந்தோம். விமான நிலையத்திலிருந்து வெளியே பார்த்தபோது, மக்கள் நடமாட்டமே காணப்படவில்லை. ஒருவேளை நாங்கள் வெளியே சென்றால், உண்மை நிலைமை தெரிய வந்துவிடும் என்பதற்காக எங்களை தடுத்து வைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறோம். இவ்வாறு திருச்சி சிவா குற்றம் சாட்டினார்.