திருப்பதியில் மின்சாரம் தாக்கி பலியான தாய்,மகன் – குடும்பத்திற்கு 8 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவிப்பு!
திருமலை: திருப்பதியில் மின்சாரம் தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 8 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த லட்சுமி, தனது கணவர் மற்றும் ஒன்றரை வயது மகன் மகேஷுடன் நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.
அங்கு சாமி தரிசனத்துக்காக வரிசையில் நின்றிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியதால், லட்சுமியும், குழந்தை மகேஷும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேவஸ்தானம் விசாரணை:
பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, திருமலை - திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் எம்.ஜி.கோபால் நேற்று விசாரணை நடத்தினார்.
எட்டு லட்சம் இழப்பீடு:
பின்னர் உயிரிழந்த லட்சுமி மற்றும் மகேஷ் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூபாய் 4 லட்சம் வீதம் ரூபாய் 8 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்தார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
மேலும் இந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
தேவஸ்தான அலுவலர்கள்:
அப்போது தேவஸ்தான இணை செயல் அலுவலர் கே.எஸ்.சீனிவாச ராஜு, தலைமை பொறியாளர் சந்திரசேர் ரெட்டி ஆகியோரும் உடனிருந்தனர்.