திருப்பதி போனா... இனி, ‘மொட்டை’ ப்ரீ!
திருப்பதி: திருமலையில் முடி காணிக்கை செலுத்துவதை இலவசமாக்கி உள்ளது தேவஸ்தானம்.
திருப்பதி செல்வோரின் முக்கியமான நேர்த்திக் கடன் முடி காணிக்கை செலுத்துவது தான். நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கு முடி காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
முடி காணிக்கை செலுத்துவதற்கென திருப்பதியில் ‘கல்யாண கட்டா' என்ற பெயரில் இடங்கள் உள்ளன. இதுவரை இங்கு முடிகாணிக்கை செலுத்த நபர் ஒன்றுக்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப் பட்டு வந்தது. ஆனால், தற்போது அதனை தேவஸ்தானம் இலவசமாக்கி உள்ளது.
திருமலையில் உள்ள மெயின் கல்யாண கட்டா, மினி கல்யாண கட்டாவில் மட்டும் இந்த இலவச வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல், பக்தர்கள் அதிகம் பயன்படுத்தாத டி.பி.சி., நாராயணகிரி, விஷ்ணுபாதம், பாஞ்சன்யம், கவுஸ்துபம், சன்னிதானம், சுதர்சனம் போன்ற இடங்களில் உள்ள கல்யாண கட்டாக்கள் மே 1ம் தேதி முதல் மூடப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து கல்யாண கட்டாக்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. கோடை காலத்தில், பக்தர்களின் வருகைக்கு ஏற்ப, கூடுதல் நாவிதர்கள் நியமிக்கபடுவர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.