திருமலையில் ஆன்-லைனில் விரைவு தரிசன டிக்கெட்
திருப்பதி: திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க வியாழக்கிழமை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரூ300 விரைவு தரிசன டிக்கெட்டுகளின், சோதனை முறை தொடங்கியது.
திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் சுவாமி தரிசனத்திற்கு நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக, தேவஸ்தானம் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகளை, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை தொடங்க உள்ளது. அதற்கான சோதனை முறையை தேவஸ்தானம் வியாழக்கிழமை நடத்தியது.
லக்கேஜ் பாதுகாப்பு
ஆன்லைன் மூலம் விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தர்கள் தங்கள் லக்கேஜ்களை பாதுகாப்பாக வைக்க, ஆழ்வார் டேங்க் அருகில், லக்கேஜ் கவுன்ட்டர், பக்தர்களை சோதித்தறியும் ஸ்கேனிங் இயந்திரமும், ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
ஒரு மணிநேரத்திற்கு முன்
மேலும், பக்தர்களின் டிக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு, 1 மணி நேரம் முன்பும் பின்பும் வரை மட்டுமே, பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் அனுமதிக்கப்படுவர்.
தரிசன டிக்கெட் ரத்து
அதற்கு முன்னும் பின்னும் வரும் பக்தர்களின் தரிசன டிக்கெட் ரத்து செய்யப்படும். இதற்கான சாப்ட்வேரை திருப்பதியிலுள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் வைத்து, அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 7 வரை
வியாழக்கிழமை தொடங்கிய இந்த சோதனை, ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி வரை நடைபெறும். பின், இதிலுள்ள குறைபாடுகளை களைந்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு வரும் நாள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.