திருப்பதி திவ்ய தரிசனம்... நாளொன்றுக்கு 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
திருமலை: திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் பயன்படுத்தி வரும் மலை பாதை பக்தர்கள் தரிசனம் எனப்படும் திவ்ய தரிசனத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேவஸ்தானம்.
திருப்பதியில் தற்போது விஐபி தரிசனம், ரூ.50 கட்டண தரிசனம் (தேவஸ்தான மையங்களில் மட்டுமே கிடைக்கும்), ரூ.300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் ஆகிய வகைகளில் ஏழுமலையானை மக்கள் தரிசித்து வருகின்றனர். இவற்றுள் சாதாரண மக்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்ய மலைபாதை எனப்படும் திவ்ய தரிசனத்தையே விரும்புகின்றனர்.
திவ்ய தரிசனம் என்பது மலை பாதை வழியாக நடந்தே சென்று சுவாமியை தரிசிப்பதாகும். இதில் இரு வழிகள் உள்ளன. ஒன்று அலிபிரி வழியாக திருமலை சென்றடைவது, மற்றொன்று ஸ்ரீ வாரி மெட்டு வழியாக செல்வதாகும். இதில் அலிபிரி என்பது 3550 படிக்கட்டுகளை கொண்டது. இங்கிருந்து மேலே செல்ல 11 கி.மீ. தூரம் ஆகும். மற்றொன்று, திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து 19 கீ.மீ. தூரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வாரி மெட்டு. 3 கி.மீ. தூரம் கொண்ட ஸ்ரீ வாரி மெட்டில் வழியாக திருமலை செல்ல 2384 படிக்கட்டுகள் மட்டுமே உள்ளன.
நேரம் மிகவும் குறைவு
சுவாமியை தரிசனம் செய்ய காத்திருக்கும் நேரம் மிகவும் குறைவு என்பதால் பாதயாத்திரையாக திருப்பதியை ஏராளமான பக்தர்கள் சென்றடைகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 10,000 பக்தர்கள் வந்த நிலையில், தற்போது பக்தர்களின் எண்ணிக்கை 45,000-ஆக உயர்ந்துள்ளது. இதனால் சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்தில் பக்தர்களின் காத்திருப்பு நேரம் அதிகரிக்கிறது.
தரிசனத்துக்கு அனுமதி
கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாததால் இனி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் திவ்ய தரிசனத்தை கடந்த 7-ஆம் தேதி முதல் ரத்து செய்தது. இந்நிலையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களில் 20,000 பேரை மட்டுமே திவ்ய தரிசனத்திற்கு அனுமதிப்பது என கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
17 முதல் அமல்
பாதயாத்திரையாக வந்தாலும் 20 ஆயிரம் பேருக்கு மேல் உள்ளவர்கள் பொது தரிசனத்தில் அனுமதிக்கப்படுவர் என்றும் இந்த முறை வரும் 17-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
பக்தர்கள் அதிருப்தி
மலைப்பாதை வழியாக வரும் பக்தர்களையும் பொது தரிசன பக்தர்கள் வழியில் அனுமதிக்கப்பட்டால், பெருமாளை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் காத்துக் கிடப்பது இன்னும் அதிகமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்க நேரிடும் என பக்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் விஐபி தரிசனத்தை குறைத்து, பொது தரிசன நேரத்தை அதிகரிக்க பக்தர்கள் கோரியுள்ளனர்.