தொடரும் குழந்தைகள் கடத்தல் - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிசிடிவிகள் பொருத்தம்
திருப்பதி தேவஸ்தான கோயிலில் குழந்தைகள் கடத்தல் அதிகளவில் நடைபெறுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பதி: குழந்தைகள் கடத்தல் அதிகளவில் நடைபெற்று வருவதை தொடர்ந்து சிசிடிவி காமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் திருமலை ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதியில் சாமி கும்பிட வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குழந்தைகள் கடத்தலை தடுக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுமார் நான்கரை கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 400 அதி நவீன சிசிடிவி காமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருட்டும், குழந்தைகள் கடத்தலும் கடந்த சில மாதங்களாக திருப்பதி கோயிலில் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராக்கள் உதவியுடன் போலீசார் துப்பு துலக்கினர். இந்நிலையில் தான் சிசிடிவி காமிராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படும் கோயில் மற்றும் நான்கு மாட வீதிகளில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இன்னும் ஆறு மாத காலத்திற்குள் கோயில் முழுவதும் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.