யெஸ் பேங்க்-ல் திருப்பதி தேவஸ்தானத்தின் ரூ1,300 கோடி டெபாசிட் தப்பியது!
திருமலை: நிதி நெருக்கடியில் சிக்கியதால் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் வந்துள்ள யெஸ் பேங்கில் அண்மையில்தான் திருப்பதி தேவஸ்தானம் தமது ரூ1300 கோடி டெபாசிட் பணம் திரும்பப் பெற்றது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
மத்திய பாஜக அரசின் மோசமான பொருளாதார கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் படுமோசமடைந்துள்ளது. வங்கிகள் திவாலாகிக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் பெரும் முதலாளிகள் பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்த பணத்தை கடன்கள் என்ற பெயரில் சூறையாடிவிட்டு வெளிநாடு தப்பிவிடுகின்றனர்.
இந்த வரிசையில் தற்போது யெஸ் பேங் இடம்பிடித்திருக்கிறது. வாரா கடன்களால் படுமோசமான நிதி நெருக்கடியில் சிக்கியது யெஸ் பேங்க். இதனால் யெஸ் பேங்கை ரிசர்வ் வங்கி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கிறது.
யெஸ் பேங்கில் இருந்து வாடிக்கையாளர்கள் ரூ50,000 மட்டுமே பணத்தை எடுக்க இயலும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது யெஸ் பேங்கில் டெபாசிட் செய்த முதலீட்டாளர்களை பெரும் பீதிக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்நிலையில் யெஸ் பேங்கில் திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் செய்திருந்த ரூ1,300 கோடி தப்பியிருக்கிறது. அதாவது திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் ஆந்திரா அரசாங்கம் மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதனையடுத்து தேவஸ்தானத்தின் டெபாசிட் தொகைகள் குறித்து ஆராயப்பட்டது.
அப்போது யெஸ் பேங்கின் நிதி நெருக்கடி அரசல் புரசலாக வெளிவர தொடங்கியும் இருந்தது. இதனால் முன்னெச்சரிக்கையாகவே ரூ1,300 கோடி டெபாசிட் பணத்தை திருப்பதி தேவஸ்தானம் சில மாதங்களுக்கு முன்னரே திருப்பி பெற்றுக் கொண்டது. தற்போதுதான் இத்தகவல் வெளியாகி இருக்கிறது.