சசிகலாவுக்காக சிறையில் விதிமுறை மீறல்.. அறியாமல் உளறிவிட்ட டிடிவி தினகரன்
பெங்களூர்: சசிகலாவுக்காக சிறையில் சலுகைகள் செய்யவில்லை என்று அதிமுக-அம்மா கட்சி துணை செயலாளர் டிடிவி தினகரன் தனது பேட்டியின்போது குறிப்பிட்டார். ஆனால் சலுகைகள் கொடுக்கப்பட்டதை அறியாமல் அவரே பேசிவிட்டார்.
பெங்களூர் சிறையில் இன்று ஒன்றரை மணி நேரம் காத்திருந்து சசிகலாவை சந்தித்தார் டிடிவி தினகரன். பிறகு நிருபர்களிடம் கூறுகையில், சிறையில் சசிகலாவுக்கு சலுகைககள் காட்டப்பட்டதாக முன்னாள் டிஐஜி ரூபா கூறியது பொய். அவர் மீது வழக்கு தொடர்வது நிச்சயம்.
சசிகலாவுக்கு முன்பும் சலுகைகள் வழங்கப்படவில்லை, இப்போதும் சலுகைகள் இல்லை. சலுகை வழங்க இங்கு பைவ்ஸ்டார் வசதி எதுவும் கிடையாது. சலுகைகள் வழங்கப்படுவதாக வெளியான தகவல்கள் பொய் என்பது உங்களுக்கும் தெரியும்.
முன்பெல்லாம் அரை மணி நேரத்தில் சசிகலாவை பார்க்க அனுமதி கிடைக்கும். இப்போது சிறைத்துறை அதிகாரிகளுக்கு பொய் புகார்கள் காரணமாக நெருக்கடி அதிகரித்துவிட்டது. இதனால், ஒன்றரை மணி நேரம் கழித்து அனுமதி தந்துள்ளனர். நான் எப்போது உள்ளே செல்கிறேன் என்பதை பத்திரிகையாளர்களும் பார்த்துக்கொண்டே இருப்பதால் கெடுபிடி அதிகமாக உள்ளது. அவர்களை சொல்லி குற்றமில்லை. இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.
விதிமுறைப்படி சிறைக்குள் தினகரனை அனுப்ப ஒன்றரை மணி நேரம் ஆகியுள்ளது. ஆனால் முன்பெல்லாம் அரை மணி நேரத்திலேயே அதிகாரிகள் சிறைக்குள் அனுப்பிவிடுவார்கள் என அவர் குறிப்பிட்டார். இதன் மூலம், முன்பு இதில் கூட விதிமுறை சரியாக பின்பற்றப்படவில்லை என்பதை அறியாமலே ஒப்புக்கொண்டார். மேலும் பத்திரிகையாளர்கள் பார்த்துக்கொண்டே இருப்பதால் சிறை அதிகாரிகள் தாமதமாக உள்ளே விட்டதாகவும் கூறி, உண்மையை அறியாமல் தெரிவித்துவிட்டார் டிடிவி தினகரன்.