டிடிவி தினகரன் மகள் திருமண நிச்சயத்திற்கு வந்த சொந்தங்கள்... சசிகலா ரிலீசுக்குப் பின் திருமணம்
கும்பகோணம்: அமமுக தலைவர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரினுக்கும் தஞ்சாவூர் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான துளசி வாண்டையார் பேரன் ராமநாதன் துளசி அய்யா வாண்டையாருக்கும் இடையே கும்பகோணம் அருகே உள்ள ரிசார்ட்டில் திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது. முக்கியமான சொந்த பந்தங்கள் மட்டுமே இந்த திருமண நிச்சயத்தில் பங்கேற்றுள்ளனர். சசிகலாவின் விடுதலைக்குப் பிறகு திருமணத்தை நடத்தலாம் என்று இரு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர்.
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா சத்தமில்லாமல் சில காரியங்களை செய்து வருகிறார். அதில் ஒன்றுதான் டிடிவி தினகரன் மகளுக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் பேசி முடித்தது. டிடிவி தினகரன் மகள் ஜெயஹரினியின் ஜாதகமும் துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசியின் ஜாதகமும் பொருந்து வரவே, திருமணம் செய்ய ஓகே சொன்னாராம் சசிகலா.
இதனையடுத்த கடந்த ஜூலை மாதத்தில் டிடிவி தினகரனுக்கு சொந்தமான புதுச்சேரி பண்ணை வீட்டிற்கு பெண் கேடு சென்றனர் துளசி வாண்டையார் குடும்பத்தினர். கொரோனா காலமாக இருந்ததால் அப்போது சம்பிரதாயமாக பேசி பூ வைத்து விட்டு வந்தனர்.
எளிமையாக நடந்து முடிந்து பூ வைக்கும் வைபவம்.
இப்போது லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சொந்த பந்தங்கள் முன்னிலையில் விரிவாக மகளின் திருமண நிச்சயத்தை நடத்தி முடித்திருக்கிறார் டிடிவி தினகரன். கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நேற்றிரவு திருமணம் நிச்சயம் நடந்தது.
இந்த விழாவில் டிடிவி தினகரனின் குடும்ப உறுப்பினர்களும், வாண்டையார் குடும்பத்து சொந்தங்களும் பங்கேற்றனர். தினகரன் தம்பி பாஸ்கரன், இளவரசி மருமகன் சிவக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலையாவார் என்று உறுதியாக தெரியாத காரணத்தால் திருமண தேதியை முடிவு செய்யவில்லை. சசிகலா தலைமையில்தான் திருமணம் நடைபெற வேண்டும் என்று இரண்டு குடும்பத்தினரும் விரும்புவதால் சசிகலா விடுதலைக்குப் பிறகு தை அல்லது மாசி மாதங்களில் அவரது தலைமையில் பிரம்மாண்டமாக திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர்.