இரட்டை இலை சின்னத்தைப் பெற ரூ.1.3 கோடி லஞ்சம்.. டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு!
இரட்டை இலை சின்னத்தைப் பெற டிடிவி.தினகரன் டெல்லி தொழிலதிபர் ஒருவருக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது தெரியவந்துள்ளது.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தைப் பெற டிடிவி.தினகரன் டெல்லி தொழிலதிபர் ஒருவருக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் ஆன சசிகலா முதல்வாக ஆசைப்பட்டதால் அதிமுக சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. எம்எல்ஏக்களின் ஆதரவால் சசிகலா அணியின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஆட்சியமைத்தது. இதையடுத்து கட்சியும் ஆட்சியும் சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் சென்றது.
இதையடுத்து கட்சியையும் ஆட்சியையும் சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து கைப்பற்ற எண்ணிய ஓபிஎஸ் அணி, அவர் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. மேலும் தாங்களே உண்மையான அதிமுக என்பதால் கட்சியும் சின்னமும் தங்களுக்கே வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தது.
இரட்டை இலையை முடக்கம்
அப்போது இரு அணியும் இரட்டை இலைச் சின்னத்துக்கு போட்டி போட்டன. இதையடுத்து தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.
மேலும் இரு அணிகளும் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.
புதிய கட்சி, புதிய சின்னம்
சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தையும் அதிமுக அம்மா என கட்சிப் பெயரையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதேபோல் ஓபிஎஸ் அணிக்கு இரட்டை மின் விளக்கு சின்னத்தையும் அதிமுக புரட்சி தலைவி அம்மா என்ற கட்சிப் பெயரையும் ஒதுக்கியது. தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் ஆர்கே நகர் இடைத்தேரர்தல் ரத்து செய்யப்பட்டது.
லஞ்சம் கொடுத்த தினகரன்
இந்நிலையில் இரட்டை இலைச்சின்னத்தை பெற்றுத் தருமாறுக்கூறி டிடிவி.தினகரன் டெல்லியைச் சேர்ந்த சுகேஷ் சந்திரா என்ற தொழிலதிபரிடம் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். தெற்கு டெல்லி ஹோட்டலில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிய சுகேஷ் சந்திராவை பிடித்து போலீசார் விசாரித்ததில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
டிடிவி.தினகரன் மீது வழக்குப்பதிவு
இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சுகேஷ் சந்திராவிடம் இருந்து ஒரு கோடியோ 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரூ.60 கோடி வரை பேரம்
இதைத்தொடர்ந்து டிடிவி.தினகரனுக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். இரட்டை இலைச்சின்னத்தை பெற சுகேஷ் சந்திராவிடம், டிடிவி தினகரன் 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.