எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டதால் கொந்தளிப்பு? குடகு ரிசார்ட் விரைந்த டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் குடகு விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்களை சந்திக்க சென்றுள்ளார்
குடகு: பதவி நீக்கத்திற்கு உள்ளாகியுள்ள தனது ஆதரவு எம்எல்ஏக்களை சந்திக்க டிடிவி தினகரன் குடகு விடுதிக்கு சென்றுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்றதால் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படி சபாநாயகர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் தகுதிநீக்கம் செய்தார்.
சபாநாயகரின் இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி விரைவில் கவிழும் என டிடிவி தினகரன் அறிவித்தார்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் குடகு ரிசார்ட்டில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு மாஜி எம்எல்ஏக்களை சந்திக்க டிடிவி தினகரன் சென்றுள்ளார்.
பதவி பறிபோனதால் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தினகரன் அங்கு சென்றுள்ளார். அவர்களை சமாதானப்படுத்துவார் என கூறப்படுகிறது. ஏற்கனவே எம்.பி வசந்தி முருகேசன், எடப்பாடி அணிக்கு சென்ற நிலையில், மேலும் பலரும் தனது அணியில் இருந்து மாறிவிடுவாார்கள் என அச்சப்படுகிறாராம் தினகரன்.
எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்துக்குப் பிறகு முதல்முறையாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை சந்தித்துள்ளார். அதிருப்தி கோஷம் எழுவதால்தான், தினகரன் ரிசார்ட் வந்துள்ளாரா என்ற கேள்விக்கு ரிசார்ட் அருகே நிருபர்களிடம் தங்கதமிழ்ச் செல்வன் பதிலளிக்கையில், "தினகரன் வராவிட்டால் ஏன் வரவில்லை என கேட்கிறீர்கள், வந்தால் இப்படி கேட்கிறீர்கள். இப்படி கேட்க சொல்லிக்கொடுத்து உங்களை அனுப்பினார்களா" என நிருபர்களிடம் சிரித்தபடி கேள்வி எழுப்பியபடியே அங்கிருந்து நகர்ந்தார்.