இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம்: நாளை கைதாகிறாரா டிடிவி.தினகரன்?
இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி.தினகரன் நாளை கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி.தினகரன் நாளை கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் நாளை சென்னை வரவுள்ளனர்.
இரட்டை இலைச்சின்னத்துக்கு ஓபிஎஸ் அணியும், சசிகலா அணியும் போட்டி போட்டதையடுத்து இரட்டை இலைச்சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இநநிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி.தினகரன் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சுகேஷ் சந்திரா என்பவருக்கு லஞ்சம் கொடுத்தது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக தொழிலதிபல் சுகேஷ் சந்திராவை போலீசார் கைது செய்தனர். தெற்கு டெல்லியில் சுகேஷ் சந்திரா தங்கியிருந்த ஹோட்டலில் நடத்திய சோதனையில் 1.30 கடி ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
லஞ்சம் பெற்றது உண்மைதான்
இதைத்தொடர்ந்து சுகேஷ் சந்திராவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டிடிவி.தினகரன் தரப்பிடம் இருந்து பணம் பெற்றது உண்மைதான் என அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
ரகசிய இடத்தில் விசாரணை
மேலும் 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகவும், முதற்கட்டமாக 1.30 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். சுகேஷ் சந்திராவை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
சம்மன் அளிக்க முடிவு
இதைத்தொடர்ந்து டிடிவி.தினகரன் மற்றும் டெல்லி அதிமுக பிரமுகர் சந்திரசேகர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கைது செய்யப்படலாம்
இதனிடையே டிடிவி தினகரன் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டிடிவி.தினகரனிடம் விசாரணை நடத்த நாளை சென்னை வரவுள்ளதாக கூறப்படுகிறது.
இடைத்தேர்தல் ரத்து
ஏற்கனவே டிடிவி.தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தற்கான ஆவணங்கள் சிக்கியதால் ஆர்கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்நிலையில் இரட்டை இலைச்சின்னத்தை பெற டிடிவி.தினகரன் லஞ்சம் கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.