குடகு விடுதியில் பிச்சிக்கிட்டு போகும் செலவு... தமிழ்நாட்டுக்கு திரும்ப தினகரனிடம் எம்எல்ஏக்கள் அடம்
குடகு ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் விரைவில் தமிழகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடகு: குடகு மாவட்டத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்களுக்கு பல கோடி செலவு செய்து தங்க வைத்துள்ளதார் தினகரன். ஆனால் அவர்கள் அனைவரும் தமிழகத்திற்கு திரும்ப வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறார்களாம்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த எம்எல்ஏக்கள், உடனே புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டிற்கு சென்று தங்கினர். அங்கே 17 நாட்கள் தங்கியிருந்து விட்டு 30 லட்சம் செலவு வைத்து விட்டு சென்றனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன் ஆளுநரை சந்திக்க சென்னை சென்ற எம்எல்ஏக்கள் அங்கிருந்து புறப்பட்டு குஷால்நகர் பென்டிக்டன் ரிசார்ட்டில் அவர்கள் தங்கியுள்ளனர்.
சபாநாயகர் கடிதம்
ஆளுநரிடம் கொடுத்த கடிதம் குறித்து விளக்கம் கேட்டு தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் 18 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியதுடன், நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
தகுதி நீக்கம்
கடந்த 18ஆம் தேதி சபாநாயகர் கொடுத்த கெடு முடிந்தும் 18 பேரும் நேரில் செல்லவில்லை. விளக்கமும் கொடுக்கவில்லை. இதனால் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
ரிசாட்டில் புலம்பல்
தங்களின் நிலை இப்படியாகிவிட்டதே என்று எம்எல்ஏக்கள் புலம்பி வருகின்றனர். பலர் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனராம். உடனே தமிழகம் செல்லவேண்டும் என்று கூறியுள்ளனராம். தகுதி நீக்க உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டதால் 18 பேருக்கும் டென்சன் அதிகரித்துள்ளது.
தினகரன் வருகை
குடகு மாவட்டத்தில் தங்கியுள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்களை டிடிவி தினகரன் குடும்பத்தினருடன் வந்து சந்தித்து பேசினார். கடந்த பத்து நாட்களாக தான் மேற்கொண்டுவரும் பணிகள் குறித்து விளக்கினார். சில நாட்கள் ரிசார்ட்டில் தங்கும் தினகரன் 18 பேருடன் தமிழகம் திரும்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ரூ. 2 கோடி வரை செலவு
குடகு ரிசார்ட்டில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்களுக்கு இதுவரை 2 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி தங்கக்கூண்டில் அடைபட்டு கிடப்பது என்று கேட்டார்களாம்
தமிழகம் திரும்ப முடிவு
அங்கு தங்கியுள்ளவர்கள் தமிழகம் திரும்ப வேண்டும் என்று வற்புறுத்தினார்களாம். இன்னும் சில தினங்களில் அனைவரும் ஒட்டுமொத்தமாக தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணி தாவ திட்டம்
தமிழகம் திரும்பிய முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி அணிக்கு தாவ வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால், அவர்கள் தமிழகம் திரும்பிய பிறகு பல அதிரடிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன நடக்கும் ?
திங்கட்கிழமையன்று 18 எம்எல்ஏக்களும் தமிழகம் திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. அதே நாளில் ஆளுநர் சென்னை வருவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தகுதி நீக்கம் பல எம்எல்ஏக்களின் மனத மாற்றியுள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது. எத்தனை பேர் எடப்பாடி அணிக்கு தாவுவார்களோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.