டிடிவி ஜெயிலுக்கு போயி ஒரு மாசம் போயிடுச்சு..ஜாமீன் மனு மீதான விசாரணை மே 29க்கு ஒத்திவைப்பு!
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனின் ஜாமீன் மனு விசாரணை மே 29க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற புரோக்கர் மூலம் லஞ்சம் தரை முயன்ற வழக்கில் சிறையில் உள்ள டிடிவி தினகரன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மே 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது அதிமுகவின் இரு கோஷ்டிகளும் உரிமை கோரியதால் அதிமுக கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. இதனையடுத்து கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்த துணைப் பொதுச்செயலாளர் இடைத்தரகர் ஒருவர் மூலம் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் பெற முயன்றதாக புகார் எழுந்தது.
டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதத்தில புரோக்கர் சுகேஷ் என்பவர் கைது சுமார் ரூ.1.30 கோடி பணத்துடன் சிக்கினார். இவர் அளித்த தகவலின்படி இரட்டை இலை சின்னத்திற்காக டிடிவி தினகரன் சுமார் 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு டெல்லி போலீஸ் தினகரனுக்கு சம்மன் அளித்தது. இதையடுத்து நான்கு நாட்கள் ஏறத்தாழ 37 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
தினகரனும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இன்றோடு ஒரு மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில் ஜாமீன் கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனு டெல்லி திஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது டெல்லி போலீஸ் தரப்பு அதிகாரி விசாரணைக்கு ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைக்க நீதிபதி பூனம் சவுத்ரியிடம் கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி தினகரன், மல்லிகார்ஜூனா ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது.