டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார் தினகரன் !
டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் டிடிவி.தினகரன் இடைத்தரகரான சுகேஷ் சந்திரசேகர் மூலம் ரூ.50 கோடி பேரம் பேசினார் என்பது குற்றச்சாட்டு.
இதுதொடர்பாக கடந்த 26ஆம் தேதி டிடிவி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் டெல்லி போலீசார் கைது செய்தனர்.பின்னர் அவரை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து சென்னைக்கு அழைத்து வந்தது டெல்லி போலீஸ். சென்னையில் பல்வேறு இடங்களில் தினகரனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் 5 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி டிடிவி தினகரனை மே 15 வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். தினகரன் நண்பர் மல்லிகார்ஜூனாவையும் மே 15 வரை சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தினகரனுக்கு முதல் சிறைவாசமாகும். கனிமொழியும், ராசாவும்தான் தமிழகத்திலிருந்து கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட முதல் அரசியல்வாதிகள். இருவரும் திமுகவினர். இதைத் தொடர்ந்து அதிமுகவின் துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் திஹார் சிறைக்கு போயிருப்பது குறிப்பிடத்தக்கது.