டிடிவி தினகரன் ஜாமீன் மனு: தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு!
டிடிவி தினகரன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பபை டெல்லி நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
டெல்லி: டிடிவி தினகரன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. தினகரனை ஜாமீனில் விடுவிக்க கூடாது என டெல்லி போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உட்பட நான்கு பேரை டெல்லி குற்றவியல் போலீசார் கடந்த மாதம் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் இருக்கும் தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா சார்பாக டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
சாட்சிகளை கலைத்து விடுவார்
அப்போது டிடிவி தினகரனை ஜாமினில் விடுவிக்கக் கூடாது என்று டெல்லி போலீஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. டிடிவி தினகரனை வெளியில் விட்டால் அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
சிலரை கைது செய்ய வேண்டும்
மேலும் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை கைது செய்ய டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் டெல்லி போலீசார் தெரிவித்தனர். மேலும் டிடிவி தினகரன் குரல் மாதிரி ஆய்வுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
இன்று தீர்ப்பு
எனவே டிடிவி தினகரனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என டெல்லி போலீசார் தீர்க்கமாக கூறினர். இதையடுத்து டிடிவி தினகரனின் ஜாமீன் மனு இன்று தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
நாளைக்கு ஒத்திவைப்பு
டிடிவி தினகரன் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் டிடிவி தினகரன் ஜாமீன் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்திரி அறிவித்துள்ளார்.