தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு.. சிக்கும் அதிமுக சீனியர்கள்!
தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சித்த விவகாரத்தில் மேலும் சில அதிமுக முன்னணிகளும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.
டெல்லி : அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுவிட வேண்டும் என்று இடைத்தரர் சுகேஷிடம் சிக்கி சிறை சென்றுள்ள டிடிவி தினகரனுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசிய நபர்களை போலீசார் விசாரிக்க உள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகர்ஜூனா ஆகியோரை டெல்லி போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரட்டை இலைசின்னத்தை பெற 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாவும், இதன் முன்னோட்டமாக 1.30 கோடி ரூபாய் கைமாறியது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரிமாற்றத்திற்கு உதவியது யார்?
உயர் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்த விவகாரத்தால் பணத்தட்டுப்பாடு நிலவிய சூழலில் கட்டுக்கட்டாக புதிய ரூபாய் நோட்டுகள் எப்படி இவர்களுக்கு கிடைத்தது. பணப்பரிமாற்றத்திற்கு உதவிய தொழிலதிபர்கள் யார் மல்லிகார்ஜுனா பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதால் பெங்களூரில் உள்ள நபர்கள் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்றும் போலீஸ் விசாரிக்க உள்ளது.
போயஸ்கார்டனிலும் விசாரணை
சென்னை அடையாரில் உள்ள தினகரன் வீட்டில் நடைபெற்று வரும் விசாரணை முடிந்த கையோடு, போயஸ்கார்டன் அறைக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதே போன்று துரைப்பாக்கம், தனியார் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
வாரஇறுதிக்குள் மாற்றம்
சென்னையில் கிடைக்கும் கூடுதல் ஆதாரங்களைக் கொண்டும் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கு வார இறுதிக்குள் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றவும் டெல்லி போலீசார் திட்டமிட்டுவருகின்றனர்.
சிக்கும் தலைகள்
தினகரன், சுகேஷ் தொலைபேசி உரையாடல் பதிவு உள்ளதாகக் கூறி வரும் டெல்லி போலீஸ் தினகரன் தவிர சுகேஷை அடிக்கடி தொடர்பு கொண்டதாக அதிமுகவின் முன்னணித்தலைவர் 2 பேரின் பெயரும் அடிபடுகிறது. தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியான முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் மற்றும் அமைச்சர் தளவாய் சுந்தரமும் பணபரிமாற்றத்திற்கு தொடர்புடையவர்களிடம் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியுள்ளதாகத் தெரிகிறது.
அம்பலமாகும் தலையீடுகள்
சென்னை கொண்டுவரப்பட்ட தினகரன் இங்கு பயன்படுத்திய தொலைபேசி உரையாடல்கள், லேப்டாப்பில் உள்ள தகவல்கள், இமெயில் தொடர்புகளை ஆராய போலீசார் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற மொத்த உரையாடல்களையும் டெல்லி போலீஸ் தோண்டித் துருவுவதால் மேலும் பல அதிமுக முன்னணிகளின் தலைகளும் வெளியே வரும் என்றும் தகவலறிந்த டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.