மோடி அரசை துக்ளக் ஆட்சியுடன் ஒப்பிட்டு விளாசிய யஷ்வந்த் சின்ஹா!
டெல்லி: பிரதமர் மோடியை, முகமது பின் துக்ளக்குடன் ஒப்பிட்டு யஷ்வந்த் சின்ஹா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துக்ளக் மன்னன், முன்யோசனை இல்லாத செயல்களுக்காக இன்றளவுக்கும் உதாரணமாக காட்டப்படுபவர்.
துக்ளக் மன்னனின் நடவடிக்கைகளை, இப்போதைய மத்திய அரசின் நடவடிக்கையோடு ஒப்பிட்டு பாஜக சீனியர் தலைவர் யஷ்வந்த் சின்ஹா பேசியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற, ஜனநாயகத்தை பாதுகாப்போம் இயக்கம் சார்பில் ரூபாய் நோட்டு வாபஸ், ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கில் யஷ்வந்த் சின்ஹா பங்கேற்று பேசியதாவது:
சொந்த கரென்சி
இந்தியாவில் முன்பு, பல அரசர்கள் தங்களுக்கென்று சொந்தமாக கரன்சிகளை வைத்திருந்தனர். சிலர் பழைய கரன்சிகளை புழக்கத்தில் இருக்க அனுமதித்தும், புதியவற்றை புழக்கத்தில் விட்டனர்.
துக்ளக் ஆட்சி
700 வருடங்களுக்கு முன் முகமது பின் துக்ளக், பழைய கரன்சிகளை தடை செய்து விட்டு, புதிய கரன்சிகளை அறிமுகம் செய்தார். இதனால், ரூபாய் நோட்டு வாபஸ் 700 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டது. எனவே, பண மதிப்பிழப்பு நடவடிக்கை 700 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டது என்று நாம் சொல்ல முடியும். டெல்லியில் இருந்து தலைநகரை தவுலதாபாத்திற்கு மாற்றியதால் தனது செல்வாக்கை துக்ளக் இழந்தார்.
பாதிப்பு அதிகம்
மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துவிட்டது. நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை, வேலை வாய்ப்பின்மைதான். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 1,28,000 கோடி நேரடி செலவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தில் 1.5 சதவீதம் குறைந்துள்ளதாக நாம் கருதினால் இதைவிட பாதிப்பு அதிகமாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
தொடர் விமர்சனங்கள்
இந்திய பொருளாதாரத்தில் இந்திய பொருளாதாரம் ரூ.3.75 லட்சம் கோடி அளவுக்கு பாதித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்கா, இவர் சமீப காலமாகவே, மோடி அரசுக்கு எதிராக கடுமையான வாதங்களை முன்வைத்து வருகிறார்.